கொவிட்-19 சூழல் காரணமாக இவ்வாண்டு சிங்கே அணிவகுப்பு முதன்முறையாக மின்னிலக்க முறையில் நேற்று முன்தினம் அரங்கேற்றப்பட்டது. தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அணிவகுப்பின் இவ்வாண்டிற்கான கருப்பொருள் ‘நம்பிக்கை ஒளி’.
இந்த நிகழ்வுகளை சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இருந்து 150 அமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2,000 பேர் படைத்தனர்.
லத்தீன், ‘ஹிப்-ஹாப்’ உள்ளிட்ட பல்வேறு நடன பாணிகளில் சிறந்து விளங்கும் 18 உள்ளூர் நடனக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரின் உணவகங்காடி கலாசாரத்தைக் கொண்டாடும் படைப்பும் அணிவகுப்பில் இடம்பெற்றது.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூருக்கு ஆதரவளிக்கும் விதமாக 500க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பாடல் பாடினர்.
மீடியாகார்ப் அரங்கில் நடைபெற்ற சிங்கே அணிவகுப்பில் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியார் திருவாட்டி ஹோ சிங்கும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் லீ, “பெரிய அளவிலான ஒன்றுகூடல்களை கொவிட்-19 முடிவுக்குக் கொண்டு வருவதற்குமுன் இங்கு நடத்தப்பட்ட கடைசி பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சிங்கே அணிவகுப்பு 2020.
“ஓராண்டு கழித்தும் வழக்கமான சிங்கே அணிவகுப்பை நம்மால் நடத்த முடியவில்லை. எனினும், புதிய முறைகளை நடத்திப் பார்க்க தடங்கலும் வாய்ப்புகளாக அமையலாம்.
“மீடியாகார்ப் அரங்கில் சிங்கே 2021ஐ பார்த்த 150 விருந்தினர்களில் நானும் ஒருவர். மேலும் பலர் தொலைக்காட்சி அல்லது இணையம் வழியாக நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்,” என்று கூறினார்.
சிங்கே அணிவகுப்பு மீடியாகார்ப் ஒளிவழிகள் 5 மற்றும் 8லும் சிங்கே இணையப்பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டது.