கடந்த ஆண்டு சாலையைக் கடந்தபோது விபத்துகளில் சிக்கி மூத்தோர் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பாதிப் பேர் மனம்போன போக்கில் சாலையைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், சாலைப் பாதுகாப்பு குறித்து மூத்தோரின் மனப்போக்கைக் கண்டறிய சர்க்கிட் ரோடு, சிராங்கூன் அவென்யூ 3 ஆகிய இடங்களுக்கு சண்டே டைம்ஸ் செய்திக்குழு கடந்த திங்கட்கிழமை சென்றது.
அன்று காலை 11 மணிக்கும் பிற்பகல் 12.30 மணிக்கு இடையில் புளோக் 79, 79A சர்க்கிட் ரோடு உணவு நிலையம் அல்லது எதிரே உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குச் செல்ல 20க்கும் அதிகமான மூத்தோர் மனம்போன போக்கில் சாலையைக் கடந்தனர்.
பாதசாரிகள் கடப்பதற்கு அருகில் சாலைப் போக்குவரத்து விளக்கு இருந்தும் கண்மூடித்தனமாக சாலையைக் கடக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகை இருந்தும் மூத்தோர் பலரும் தங்களது வசதிக்கேற்ப சாலையைக் கடந்தனர்.
சாலையோரமாக பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பாதசாரிகள் சாலையைக் கடப்பது எதிர்வரும் வாகன ஓட்டுநர்களுக்குத் தெரியாமல் போகும் அபாயம் நிலவியது.
சர்க்கிட் ரோடு பகுதியில் மூத்தோர் மனம்போன போக்கில் சாலையைக் கடப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று திரு சியா, 79, எனும் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
"சாலைப் போக்குவரத்து விளக்கு இருக்கும் இடம் வரை நடந்துசெல்லவோ மின்தூக்கி வசதி இல்லாத மேம்பாலத்தைக் கடக்கவோ மூத்தோர் சிலருக்கு வலிமை இல்லை," என்று அவர் சொன்னார்.
திரு பாங், 70 எனும் மற்றொரு குடியிருப்பாளர், எதிர்வரும் வாகனங்களின் வேகத்தை மூத்தோர் தவறாக மதிப்பிட்டுவிடுவதால் மூத்தோர் விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர் என்று கூறினார்.
அன்று மாலை 6 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் சிராங்கூன் அவென்யூ 3ல் மூத்த குடிமக்கள் 60க்கும் அதிகமானோர் மனம்போன போக்கில் சாலையைக் கடந்தனர். அந்த இருவழி சாலையில் போக்குவரத்து பெரும்பாலும் அதிகமாக இருந்தது.
ஐம்பது மீட்டர் தூரத்தில் சாலைப் போக்குவரத்து விளக்கு இருந்தபோதிலும் மூத்தோர் பலர் மனம்போன போக்கில் சாலையைக் கடந்தனர்.
திரு மார்க் எனும் குடியிருப்பாளர் ஒருவர், "வாகனங்கள் அதிகம் செல்லாதபோது சாலையைக் கடக்க சாலைப் போக்குவரத்து விளக்கு இருக்கும் வரை நடந்துசெல்வதற்கான தேவை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்பு குறித்து மூத்தோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவால்மிக்க பணி என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம், மூத்தோர் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற அமைப்புகள் கூறின. சாலைப் பாதுகாப்பு குறித்து மூத்தோரிடம் ஒருமுறைக்குப் பலமுறை எடுத்துக்கூற வேண்டியுள்ளதாக அவை குறிப்பிட்டன.
சட்டம், ஆலோசனை ஒருபுறம் இருக்க, ஒருவர் தமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதும் முக்கியம் என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவர் பெர்னர்ட் டே வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு போக்குவரத்து போலிசும் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் சேர்ந்து 'மூத்தோருக்கான சாலைப் பாதுகாப்பு 2020' எனும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தன.
மூத்தோரிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தாங்கள் திட்டங்கள் சிலவற்றை உருவாக்கியதாக நான்கு மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் குறிப்பிட்டன.
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை விபத்துகளில் உயிரிழந்த மூத்த பாதசாரிகளின் எண்ணிக்கை 25க்கும் 28க்கும் இடைப்பட்டிருந்தது.

