முதற்கட்டமாக ஆண்டுக்கு 1,000 டன்; 2023ல் 2,700 டன் மீன் உற்பத்தி செய்யும் சிங்கப்பூரில் எட்டு மாடி மீன் பண்ணை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும். அதுவே சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் ஆக உயரமான மீன் பண்ணையாக இருக்கும்.
லிம் சூ காங்கில் ‘அப்பல்லோ அக்வாகல்சர் குரூப்’ என்ற உள்ளூர் மீன் பண்ணை நிறுவனம் அந்த எட்டு மாடி மீன் பண்ணையைத் திறந்து இருக்கிறது.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவித்து வரும் நிலையில் அந்த மீன் பண்ணை செயலில் இறங்குகிறது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பிப்ரவரி 16ஆம் தேதி வேளாண்-உணவு குழும உருமாற்ற நிதி என்ற ஒரு நிதி ஏற்படுத்தப்பட்டு அதற்கு $60 மில்லியன் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்தார். அந்த நிதி, பண்ணை உரிமை யாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க உதவும். இதன் விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும்.
சிங்கப்பூர் தன்னுடைய உணவு தேவையில் 30 விழுக்காட்டை 2030ஆம் ஆண்டு வாக்கில் உள்ளூர் உற்பத்தி மூலம் ஈடுசெய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
புதிய எட்டு மாடி மீன் பண்ணையின் முதல் கட்டத்தில் மூன்று மாடிகள் உள்ளடங்கி இருக்கும் என்றும் ஆண்டுக்கு 1,000 டன் வரை மீன் உற்பத்தி செய்யப்படும் என்றும் அப்பல்லோ குரூப் நிறுவனத்தின் அனைத்துலக மற்றும் நிறுவன மேம்பாட்டு மூத்த இயக்குநர் லக்கி புவா தெரிவித்தார்.
எட்டு மாடி பண்ணையும் 2023ல் செயல்படும்போது ஆண்டுக்கு 2,700 டன் மீன் உற்பத்தியாகும்.
சிங்கப்பூரில் 2019ல் ஏறத்தாழ 4,707 டன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனம் $65 மில்லியன் செலவில் அமைத்து இருக்கும் அடுக்குமாடி மீன் பண்ணை நியோ டியோ கிரசெண்ட் பகுதியில் நீல நிறத்தில் ஆக உயர கட்டடமாகக் காணப்படுகிறது. அந்த இடம் சிங்கப்பூரில் எந்த ஒரு தொழிற்பேட்டையிலும் காணப்படாத கிராமியப் பகுதியாக இருக்கிறது.
உள்ளூர் உற்பத்தி பெருக பெருக விலையும் குறையும் என்றார் திரு புவா.
இதனிடையே, அடுக்குமாடி மீன் பண்ணை உத்தி பற்றி கருத்து கூறிய ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வேளாண் ஆய்வு, புத்தாக்க நிலைய மூத்த நிர்வாகி டாக்டர் ரிட்டு பல்லா, அப்பல்லோ நிறுவனம் இப்போது கைக்கொள்ளும் அடுக்குமாடி மீன் பண்ணை போன்ற ஏற்பாடுகள்தான் எதிர்காலத்தில் நமக்குரிய வழியாக இருக்கும் என்று கருத்து கூறினார்.
இதனிடையே, உள்ளூர் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல்வேறு செயல்திட்டங்களைத் தான் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த அமைப்பு இரண்டு முன்னோடித் திட்டங்களைச் சோதித்துப் பார்க்கும்.
உள்ளூரில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் புதிய தாய்மார்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவது அந்தத் திட்டங்களில் ஒன்று.
ஈரச்சந்தைகளில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை மக்கள் எளிதாக அடையாளம் காண கண்கவர் விளம்பரங்களை இடம்பெறச்செய்வது மற்றொரு செயல்திட்டம்.