சிங்கப்பூரில் பயங்கரவாத காரியங்கள் தொடர்பில் 2015 முதல் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தடுத்து வைத்த 53 பேரில் ஏழு பேர் 16க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்கள். அவர்கள் அனைவருமே இணையம் மூலம் தீவிர மனப்போக்கை வளர்த்துக்கொண்டவர்கள்.
அந்த ஏழு பேரில் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள் தங்கள் வலைக்குள் கொண்டுவர அவர்களின் இளம் வயதே காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய தீவிரவாதிகள் இணையப் போக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு இணையத்தில் தலைதூக்கும் டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற புதிய தளங்களையும் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சித்தாந்தங்களை இளையர்களிடம் பரப்பும் உத்தியைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
அதேவேளையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பல மொழிகளில் பிரசாரங்களை உருவாக்க பல குழுக்களைக் கொண்டுள்ளது.
ராணுவ ரீதியில் தோல்வியடைந்துவிட்ட அந்த இயக்கம் இப்போது சித்தாந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சமய மறுவாழ்வுக் குழு என்ற அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் முகம்மது அலி தெரிவிக்கிறார்.
“இளையர்கள் எளிதில் வளையக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தங்களை எதிர்நோக்கி இருப்பவற்றைப் பற்றி அவர்கள் உணர்வதில்லை. அத்தகைய குழுக்களுக்கு உதவி அவற்றைப் பாதுகாக்கும் கதாநாயகர்களாகத் திகழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குக் கவர்ச்சியாக உள்ளது.
“இது தாங்கள் ஒரு கனவில் இருப்பதாக அவர்களை நம்பச் செய்கிறது,” என்று 20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பதின்ம வயதினருக்கு ஆலோசனை கூறி வரும் மருந்தக மனோவியல் வல்லுநர் டாக்டர் பால்ஹெட்செட் தெரிவித்தார்.
இளையர்கள் பயங்கரவாதிகளின் வலையில் சிக்குவதை தடுப்பதற்கான போராட்டம் வெற்றிகரமான முறையில் இடம்பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பு இல்லாமல் இல்லை.
இங்குள்ள இளையர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் சரியான போதனைகளைப் புரிந்துகொண்டு தீவிரவாத கண்ணோட்டங்களில் சிக்காமல் நடந்துகொள்வதுதான் இதில் தலைசிறந்த தற்காப்பு என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை மாணவர்களோடும் சமூகத்தோடும் சேர்ந்து செயல்பட்டு மாணவர்களின் மனதில் நன்னெறிகளை ஆசிரியர்கள் பதிக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் பிரசார வலையில் சிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அத்தகைய மாணவர்களுக்கு உதவி கிடைப்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
இதில் நற்குணம் குடியியல் கல்வியும் போன்ற பாடத்திட்ட முயற்சிகளும் உறுதுணையாக இருக்கின்றன. ஆலோசனையாளர்களும் முக்கிய பணியாற்றுகிறார்கள். பள்ளி ஆலோ சனையாளர்களுக்கு 2016 முதல் உள்துறை அமைச்சு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.
இளையர்கள் தீவிரவாதிகளின் உத்திகளில் சிக்காமல் தடுப்பதற்கான இத்தகைய முயற்சிகள் சக மாணவர்களின் ஆக்ககரமான செல்வாக்குடன் சேரவேண்டுமென வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.