பொங்கோலில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் காட்டுப் பன்றி தாக்கி இருவருக்குக் காயம் ஏற்பட்டது.
பொங்கோல் வாக், புளோக் 308Bல் இரவு 9.10 மணிக்கு முதலாவது சம்பவம், புளோக் 310Aல் இரவு 9.30 மணிக்கு இரண்டாவது சம்பவம் என இருமுறை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்புகள் வந்தன.
தாக்குதலில் காயமுற்ற இருவரும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
லியன்ஹ வான் பாவ் சீன நாளிதழ் செய்தியின்படி, முதல் காட்டுப் பன்றித் தாக்குதல் புளோக் 310Aக்குக் கீழ் நடந்தது. அங்கு ஒரு பெண்ணைக் காட்டுப் பன்றி கடித்து அவரை சுமார் ஒரு மீட்டருக்குத் தொலைவுக்கு இழுத்துச் சென்றது.
சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் வான் பாவ் நாளிதழிடம் பேசினார். அதில் அவர் ஒரு பெண் உதவிக்காக அழுவதைக் கேட்டவுடன் போலிசை அழைத்ததாகக் கூறினார்.
மற்றொரு குடியிருப்பாளர் தனது குடையைக் கொண்டு அந்தக் காட்டுப் பன்றியை அடித்தார். அங்கு வந்த உணவு விநியோக ஊழியர், பன்றிக்குப் பயத்தை ஏற்படுத்த தனது சைக்கிள் மணியைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்தார்.
இச்சம்பவங்கள் குறித்து நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த பொங்கோல் வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி சுன் சூலிங், தாக்குதலில் காயம்பட்ட இருவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
“தேசிய பூங்காக் கழகத்துடனும் சிங்கப்பூர் போலிஸ் படையுடனும் நான் சனிக்கிழமை முதல் தொடர்பில் இருக்கிறேன். காட்டுப் பன்றி தாக்குதல் குறித்து அந்த அமைப்புகள் எனக்குத் தகவல் அளித்துக்கொண்டிருக்கின்றன.
“தாக்குதல் நடத்திய காட்டுப் பன்றியைத் தேடும் பணியில் 20 ஆடவர்கள் ஈடுபட்டுள்ளனர். மற்ற குடியிருப்பாளர்களை அந்தப் பன்றி தாக்காமல் தடுக்கும் நோக்கத்தில் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
“காட்டுப் பன்றியை எதிர்கொண்டால் என்ன செய்யலாம் என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகளை நீர்முகப்பு நெடுகிலும் தேசிய பூங்காக் கழகம் வைத்துள்ளது,” என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
காட்டுப் பன்றியை எதிர்கொண்டால், அமைதியாக இருக்கும்படியும் உடனே அங்கிருந்து மெதுவாக சென்றுவிடுமாறும் பொதுமக்களுக்குக் கூறும் ஆலோசனையை தேசிய பூங்காக் கழகம் தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அவற்றுக்கு உணவளிப்பதை, சினமூட்டுவதை, அதனை புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
குறிப்பாக, தனது குட்டிகளுடன் உள்ள பன்றிகள் அவற்றைப் பாதுகாக்க மூர்க்கமாக நடந்து கொள்ள நேரிடலாம் என்றும் அவற்றைத் தனியாக விட்டுவிடவும் என்றும் கழகம் கூறுகிறது.