அடுத்த பத்தாண்டுக்குள் தை செங் பகுதியின் சில இடங்களில் உள்ள சாலையோர வாகன நிறுத்துமிடங்களை அகற்றி, அங்கு சைக்கிளோட்டப் பாதைகளை அமைக்கும் யோசனை பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூ செங் ரோடு, மெக்டகாட் ரோடு, கிம் சுவான் ரோடு, தை செங் அவென்யூ ஆகியவற்றில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை அகற்றும் உத்தேச திட்டத்தைத் தவிர மெக்டகாட் ரோடு, கிம் சுவான் ரோடு, தை செங் அவென்யூ ஆகிய சாலைகளில் உள்ள தடங்களில் ஒன்றை அகற்றுவது பற்றியும் ஆணையம் பரிசீலித்து வருகிறது. ஜூ செங் ரோட்டில் உள்ள சாலைத் தடங்களின் குறுக்களவு குறைக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்த ஏலக் குத்தகை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாலையோரப் பகுதி, நடைபாதை, சைக்கிளோட்டப் பாதை ஆகியவற்றை உள்ளடக்கக்கூடிய வகையில் பெரிதாக இல்லை என்றால், சாலையோரத்தில் உள்ள வாகனநிறுத்துமிடங்களை அகற்றவும் அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அந்த ஆவணங்கள் தெரிவித்தன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, கோவன் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள இயோ சூ காங், அப்பர் சிராங்கூன் ரோடு ஆகியவற்றில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை அகற்றி அங்கு சைக்கிள்களை நிறுத்தி வைக்கும் அடுக்குகளை உருவாக்கும் சாத்தியம் பற்றி ஆராயும்படியும் குத்தகைதாரர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த இரு பகுதிகளில் கார்களை நிறுத்த மொத்தம் 132 இடங்களும் மோட்டார்சைக்கிள்களை நிறுத்த 10 இடங்களும் உள்ளன. அவற்றுக்குப் பதிலாக அங்கு 124 சைக்கிள் நிறுத்தும் இடங்களை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆணையம் கூறியது.
இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு நிபுணர் திரு ரேமண்ட் ஓங், "உந்து நடமாட்டத்துக்குச் சாதகமாக சாலையை மீட்டெடுத்தல், அமெரிக்காவின் போர்ட்லண்ட், கனடாவின் கேல்கரி ஆகிய இடங்களில் பிரபலமாகி வருகிறது," என்பதைச் சுட்டினார்.

