சிங்கப்பூரில் ஹுவாவே நிறுவனத்தின் US$40 மில்லியன் மதிப்பிலான வட்டார நிலையம் தொடக்கம்

சிங்கப்பூரில் ஹுவாவே நிறுவனத்தின் US$40 மில்லியன் மதிப்பிலான வட்டார நிலையம் தொடக்கம்

1 mins read
60a35b30-064f-4d7f-9d42-3a335d1d261e
சீனாவை சேர்ந்த கைபேசித் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே, சிங்கப்பூரில் சாங்கி தொழிற்பேட்டையில்  US$40 மில்லியன் வட்டார நிலையத்தைத் தொடங்கி இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சீனாவை சேர்ந்த கைபேசித் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே, சிங்கப்பூரில் சாங்கி தொழிற்பேட்டையில் US$40 மில்லியன் வட்டார நிலையத்தைத் தொடங்கி இருக்கிறது.

கைபேசிச் செயலிகளை உருவாக்க அந்த நிலையம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹுவாவே, ஆசிய பசிபிக்கில் அமைத்துள்ள முதல் நிலையம் அதுவே ஆகும்.

'டிஜிஎக்ஸ் லேப்' என்று குறிப்பிடப்படும் அந்த நிலையம், கைபேசிச் செயலிகளை உருவாக்குவோருக்கு இணையம் வழியாகவும் இதர வழிகளிலும் ஆலோசனைச் சேவைகளை வழங்கும்.

செயலிகள் உருவாக்கத்தில் நேரடி ஆதரவையும் அந்த நிலையம் வழங்கும்.

அத்தகைய செயலிகளை ஹுவாவே சாதனங்களில் பரிசோதித்து பார்க்கலாம்.

இதர தொழில்நுட்ப ஆதரவுச் சேவைகளையும் அந்தப் புதிய நிலையம் மூலம் பெறலாம்.

சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ள டிஜிஎக்ஸ் லேப், அந்த நிறுவனத்தின் இரண்டாவது உலக நிலையமாகும்.

ஹுவாவே, ஜெர்மனியில் ஏற்கெனவே தனது முதல் நிலையத்தைத் தொடங்கி இருக்கிறது.

மேலும் ஆறு நிலையங்களை அமைக்க திட்டமிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 சூழலிலும் சென்ற ஆண்டில் அந்த நிறுவனம் சிங்கப்பூரில் தனது ஹுவாவே கைபேசிச் சேவைகளை மூன்று மடங்காக்கியது.

ஹுவாவே 289 சதுரமீட்டர் பரப்பளவில் அமைத்துள்ள டிஜிஎக்ஸ் லேப் பரிசோதனைக் கூடத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் US$40 மில்லியன் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.