டிபிஎஸ் வங்கி, முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்கும் ஏற்பாட்டை செய்துள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இந்தச் சேவை இன்று முதல் அறிமுகம் கண்டது.
இணையம் வழியாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களை முக அடையாளம் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்ற டிபிஎஸ், இதற்கு சிங்கப்பூர் அரசாங்க தொழில் நுட்ப அமைப்பின் (GovTech) முக அடையாளத்தை சரிபார்க்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது என்று குறிப்பிட்டது.
“சிங்பாஸின் முக அடையாளத்தை சரி பார்க்கும் முறையினால் கடவுச்சொல்லை நினைவு கொள்ளத் தேவையில்லை. விண்ணப்பத்தை அங்கீகரிக்க முகத்தைக் காட்டினால் போதும்,” என்று டிபிஎஸ் மேலும் விளக்கியது.
கடந்த நவம்பர் மாதமே முன்னோடித் திட்டமாக நிறுவனங்களுக்காக முக அடையாளம் மூலம் வங்கிக் கணக்குத் திறக்கும் வசதியை டிபிஎஸ் அறிமுகம் செய்தது.
அப்போதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்புதிய வசதியை பயன்படுத்தி வருகின்றன.
இணையம் வழியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட 20 நிமிடங்களில் வங்கிக் கணக்கை தொடங்கிப் பயன்படுத்த முடியும் என்று டிபிஎஸ் கூறியது.
டிபிஎஸ்ஸின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிப் பிரிவு குழுமத்தின் தலைவரான ஜாய்ஸ் டீ, “நிறுவனங்கள் முக்கியமான பரிவர்த்தனைகளை செய்வதால் அவர்களுடைய சிரமங்களைக் குறைக்க மின்னிலக்க புத்தாக்க வழியில் முயற்சிகளை எடுத்துள்ளோம்,” என்றார். இதனால்
நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய வர்த்தகத்தில் கவனம் செலுத்தி இன்றைய சூழல்களுக்கு ஏற்ப செயல்படலாம் என்று அவர் சொன்னார்.
சிங்பாஸ் முக அடையாளம் சரிபார்க்கும் முறை, தேசிய அங்க அடையாளத் தரவுகளுடன் பொருத்திப் பார்க்க வழி வகுக்கிறது.