பொங்கோல் ஈஸ்ட், பொங்கோல் சென்ட்ரல் ஆகியவற்றுக்கிடையேயான சாலை சந்திப்பில் ஒரு பேருந்து, 2 கார்கள் மோதிய விபத்தில் சிக்கிய கார் ஒன்றின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 20) அன்று பிற்பகல் 1.58 மணிக்கு அந்தப் பகுதியில் நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் உதவி வேண்டி போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் சிக்கிய இரு கார்களில் ஒன்றின் ஓட்டுநரான 68 வயது ஆடவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது சுயநினைவின்றி இருந்ததாகவும் அவர் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை தெரிவித்ததாகவும் போலிஸ் தெரிவித்தது.
மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த ஓட்டுநர் உயிரிழந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. மாரடைப்பானது விபத்துக்கு முன்பு ஏற்பட்டதா அல்லது விபத்துக்குப் பிறகு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
விபத்து நிகழ்ந்த வழியில் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் அந்த ஆடவருக்கு இதய இயக்க மீட்பு முதலுதவி சிகிச்சை செய்ததாகவும் ஆனால், அது பலனளிக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
விபத்தின் தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.