அண்மையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் தங்களுடைய வருடாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனை தேதியை மாற்றி அமைத்துக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி காரணமாக நிணநீர்க் கட்டிகள் வீக்கமடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவை மார்பகப் பரிசோதனையில் தெரியவரும்போது அவற்றைப் புற்றுநோய்க்கான அறிகுறி என்று மருத்துவர்கள் தவறாக முடிவு செய்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால் கொவிட்-19 தடுப்பூசிக்கு முன்னதாக அல்லது இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதற்குப் பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து மார்பகப் பரிசோதனைகள் நடத்தப்படுவதற்குத் தோதாக ஏற்பாடுகளைச் செய்து தரும்படி மருத்துவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு இருக்கிறது.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி காரணமாக கழுத்திலும் கைகளிலும் நிணநீர்க் கட்டிகள் வீங்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. என்றாலும் அந்த வீக்கம் ஒரு வார காலத்தில் மறைந்துவிடும் என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
கொவிட்-19 தடுப்பூசி காரணமாக அந்த ஊசி போடப்படும் கையில் நிணநீர்க் கட்டிகள் தடித்துவிடக்கூடிய வாய்ப்பு உண்டு.
இதைப் புற்றுநோயின் தொடக்கம் என்று தவறாக மருத்துவர்கள் அடையாளம் கண்டுவிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் மார்பக அறுவைசிகிச்சை வல்லுநர் டாக்டர் டான் யா யுயன் கூறினார்.
கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இரண்டு சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் புறஒலி மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொண்டார்கள். அவர்கள் இருவருக்குமே ஊசி போடப்பட்ட கையில் நிணநீர்க் கட்டிகள் தடித்து இருந்தது தெரியவந்தது.
அவர்களின் மார்பகத்தில் இதர புற்றுநோய்க்கான சந்தேக அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. ஆகையால் அவர்களுக்குத் திரும்பவும் புறஒலி மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த மருத்துவர் தெரிவித்தார்.
பரிசோதனை தேதியை மாற்றிக்கொள்ளும்படி அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் டான் கூறினார்.

