தற்போது பணியில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது.
அவர்கள் அனைவரும் இவ்வார இறுதிக்குள் தங்களது முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வர்.முன்கள நிலப் போக்குவரத்து ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட்டு அவர்களுக்குக் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் ஹோங் கா உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தில் நேற்று சுமார் 300 ஓட்டுநர்கள் தங்கள் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியுடைய ஓட்டுநர்கள் அதற்கான அழைப்பைப் படிப்படியாகக் குறுஞ்செய்தி மூலம் பெறுவார்கள். பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களுக்கு ஏற்புடைய நாளையும் நேரத்தையும் உறுதி செய்துகொள்ளலாம்.
இந்த ஓட்டுநர்கள் தங்கள் தடுப்பூசியை 14 தடுப்பூசி நிலையங்கள், 20 பலதுறை மருந்தகங்கள், தற்போது தீவெங்கும் தடுப்பூசி நிலையங்களாகச் செயல்படும் 22 பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் ஆகியவற்றில் போட்டுக்கொள்ளலாம்.
கடந்த மாதம் விமானத்துறை, கடல்துறை, பொதுப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப் பட்டது. இப்போது டாக்சி, தனியார் வாடகை கார் ஒட்டுநர்களுக்கான தடுப்பூசி போடுதல் தொடங்கியுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டிலும் தேசிய டாக்சி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று ஹோங் கா உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் தடுப்பூசி நிலையத்திற்கு வருகை புரிந்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு கிடைக்கும் ஓட்டுநர்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலுவான வேண்டுகோள் விடுத்தார்.
“உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாக்க தடுப்பூசி பெருந்துணை புரிகிறது. அதைப் போட்டுக்கொள்வதால் உங்களுக்கு மனஅமைதி கிடைக்கும். உங்கள் மீது உங்கள் பயணிகள் கூடுதல் நம்பிக்கை வைப்பார்கள்,” என்றார் டாக்டர் கோர்.
டாக்சி, தனியார் வாடகை கார் நடத்துநர்கள், தேசிய டாக்சி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுக்கு அமைச்சர் கோர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் உட்பட 80,000க்கும் மேற்பட்ட நிலப் போக்குவரத்து ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் ஒட்டுமொத்தத் திட்டம் பற்றிய தகவலையும் அமைச்சர் வெளியிட்டார். இம்மாதம் 14ஆம் தேதி வரை, பொதுப் போக்குவரத்து ஊழியர்களாக உள்ள 14,000க்கு மேற்பட்ட பேருந்து, ரயில் ஓட்டுநர்கள் தங்கள் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
அவர்களில் 10,000க்கு மேற்பட்டோர் தங்கள் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.