உள்ளூர் வனப்பகுதிகளில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 400 விலங்குகள் பிறந்ததாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் இன்று தெரிவித்தது. அவற்றில் அருகிவரும் சில விலங்குகளும் அடங்கும்.
பிறந்த 107 விலங்கினங்களில் 29 விலங்கினங்கள் அருகிவரும் பிரிவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றில் முற்றிலும் அழியும் அபாயத்தில் இருக்கும் இரண்டு மலாயா புலிக்குட்டிகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் இப்போதுதான் மலாயா புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.
“உலகில் ஏறத்தாழ 150 மலாயா புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே, புதிதாகப் பிறந்திருக்கும் இவ்விரு மலாயா புலிக்குட்டிகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் தலைமை உயர் அறிவியல் அதிகாரி டாக்டர் செங் வென்-ஹோர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிறந்த அவ்விரு மலாயா புலிக்குட்டிகள் அவற்றின் தாயுடன் நைட் சஃபாரியில் உள்ளன.
இரண்டு மலாயா புலிக்குட்டிகளையும் விலங்கு பராமரிப்புக் குழு மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.