கொவிட்-19 தொடர்பான இல்லத்தனிமை உத்தரவை மீறியதற்காக பிரிட்டிஷ் ஆடவருக்கும் அவரைச் சந்தித்த மனைவிக்கும் நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நைஜல் ஸ்கியா, 52, என்னும் அந்த ஆடவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்போதைய அவரது வருங்கால மனைவியான அகதா மகேஷ் ஈயமலை, 39, என்னும் சிங்கப்பூர் பெண்மணிக்கு அவர் அந்த உத்தரவு குறித்து தெரிவித்தார். அந்தப் பெண், மரினா பேயில் உள்ள ரிட்ஸ் -கார்ல்ட்டன் மில்லனியா ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய் தார். அவரும் அதே ஹோட்டலின் 27வது மாடியில் தங்கினார்.
ஸ்கியா தமது 14வது மாடி அறையிலிருந்து செப்டம்பர் 21ஆம் தேதி பின்னிரவு 2.22 மணிக்கு அகதாவைச் சந்திக்க அவசர வெளியேறும் படிக்கட்டுகள் வழியாக முகக்கவசம் அணியாமல் சென்றார். அகதாவின் அறையில் நேரத்தைச் செலவிட்ட பின்னர் முற்பகல் 11.13 மணிக்குத் தமது அறைக்கு ஸ்கியா திரும்பியபோது அவரது மாடிக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நான்காவது மாடிக்கு இறங்கிச் சென்ற அவரை பாதுகாவலர் தடுத்தார்.
ஸ்கியா தம் மீது சுமத்தப்பட்ட கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழான ஒரு குற்றத்தையும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழான ஒரு குற்றத்தையும் இம்மாதம் 15ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அவருக்கு இரு வார சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக அகதாவுக்கு ஒரு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக, இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் மணம் புரிந்துகொண்டனர்.

