பயணத்துக்கு முந்திய கொவிட்-19 சோதனை நடத்த அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூர் மருந்தகங்கள் இனி சோதனை முடிவுகளை தற்போதைய தாளினாலான சான்றிதழ்களுக்குப் பதிலாக மின்னிலக்கச் சான்றிதழ்களாக அளிக்க வேண்டும்.
இந்த மாற்றம் இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால், எல்லா மருந்தகங்களும் இந்தப் புதிய விதிமுறைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள அவற்றுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
"இந்தப் புதிய மின்னிலக்கச் சான்றிதழ் அளிக்கும் திட்டம் ஹெல்த்செர்ட்ஸ் திட்டத்தைச் சார்ந்துள்ளது.
"கொவிட்-19 சோதனை முடிவுகளைத் தெரிவிக்கும் மின்னிலக்கச் சான்றிதழ் அளிக்கும் திட்டத்தால் முன்பு தாள் வடிவில் அளிக்கப்பட்ட சான்றிதழ் கிழிய வழி இருக்காது. மேலும் மின்னிலக்க வடிவில் இருப்பதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் பயணத்தைப் பதிவு செய்யும்போதும் சுங்கச் சாவடியைக் கடக்கும்போது இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் விவரித்தார்.
"அந்த மின்னிலக்கச் சான்றிதழுக்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அப்போதுதான் அது விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்படும் என்றும் டாக்டர் விவியன் விளக்கினார்.
இந்தச் சான்றிதழ் அரசாங்கத்தின் அறிவிப்பு இணையத்தளத்தில் (www.notarise.gov.sg) பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், மின்னிலக்கச் சான்றிதழைப் பதி விறக்கம் செய்யும் 'க்யூஆர்' குறியீடு பயணிகளுக்கு அனுப்பப்படும்.
விமான நிறுவன மற்றும் குடிநுழைவு அதிகாரிகள் அந்த 'க்யூஆர்' குறியீட்டை வருடி, அந்த மின்னிலக்கச் சான்றிதழ் உண்மையானதா என்று அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கிய இணையத்தளத்தில் அது சுகாதார அமைச்சால் அங்கீகரிப்பட்டதா என்று சோதித்துப் பார்ப்பார்கள்.
இந்த மின்னிலக்கச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தடுப்பூசி திட்டத்துக்கும் நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.

