வாம்போவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் இன்று (பிப்ரவரி 28) தீப்பற்றியதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் புகையை சுவாசித்தது உட்பட காயங்கள் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிடுகிறது.
ஜாலான் டென்டெரமில் உள்ள புளோக் 22ல் உதவி கோரி இன்று காலை 9 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரண்டாவது மாடியில் இருக்கும் அந்த வீட்டில் பற்றிய தீ கொளுந்துவிட்டு எரிந்ததாகக் கூறப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருமுன்பே அந்த வீட்டில் இருந்த 6 பேரும் வெளியேறினர். அவர்களில் இருவர் தரைத்தளத்தில் காயங்களுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
சென்ட்ரல் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காற்று நுரை பொட்டலங்களைக் கொண்டும் தீயை அணைத்தனர்.
பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 100 பேர் பத்திரமான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீப்பற்றிய வீட்டின் கூடத்தில் உள்ள மின்சார இணைப்புப் பெட்டியிலிருந்து தீ மூண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.