செம்பவாங் வட்டாரத்தைச் சேர்ந்த, தேவையுள்ள குடியிருப்பாளர்கள் இனி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைச் சுவைத்துப் பார்க்கலாம்.
இதற்காக, அங்குள்ள 23 சமூகத் தோட்டங்களில் பணியாற்றும் கிட்டத்தட்ட 250 குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு அடுத்த ஆண்டில் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விநியோகிக்கவுள்ளனர்.
செம்பவாங் குழுத்தொகுதி ‘கார்டன்ஸ் கிவ் பேக்’ திட்டத்தின்கீழ், அவ்வட்டாரத்தில் உள்ள சமூகத் தோட்டங்களில் விளைந்த கிட்டத்தட்ட 200 கிலோ காய்கறிகள், செம்பவாங் வெஸ்ட் மற்றும் அட்மிரல்டி பகுதிகளைச் சேர்ந்த 270 குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், எண்ணெய், உப்பு, துணிமணிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சமூகத் தோட்டங்களில் விளைந்த கீரைகள், காய்கறிகளைப் பறிக்கும் நடவடிக்கையில் திரு விக்ரம் நாயரும் செம்பவாங் குழுத் தொகுதி எம்.பி.க்களில் ஒருவரான திருவாட்டி போ லீ சானும் குடியிருப்பாளர்களுக்கு உதவினர்.
“குறைந்த வருமானம் ஈட்டும் குடியிருப்பாளர்களும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய முயல்கிறோம். பெரும்பாலும் அவர்கள் போதுமான காய்கறிகளை உண்பதில்லை. ஆகவே, அவர்களுக்குக் காய்கறிகளை வழங்குவதன்மூலம், அவர்கள் அவற்றை அதிகமாக உண்ணும்படி ஊக்குவிக்க முடியும் என நம்புகிறோம்,” என்றார் திரு விக்ரம்.
சமூகத்திற்குத் திருப்பித் தருவதன் மூலம் இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்க உதவுகிறது என்று திருவாட்டி சான் கூறினார்.