“ஃபெஸ்டிவ் சீயர்ஸ் @ சவுத்வெஸ்ட்” திட்டத்தின் மூலம் உதவும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் சமூக பங்காளிகள் ஒன்று திரண்டு தென்மேற்கு வட்டாரவாசிகளுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.
விழாக்கால நன்கொடைத் திரட்டு நிகழ்ச்சியில் கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவ நன்கொடை அளித்து உதவ சமூக அமைப்புகளுடன் சிறிய, பெரிய நிறுவனத்தினர் மற்றும் இணைய வர்த்தகர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.
புத்தாடை, நோட்டுப்புத்தகங்கள், பேனா, பென்சில், மளிகைச் சாமான்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் என நலிந்த முதியோர் குடும்பங்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
கிடைக்கப்பெற்ற நன்கொடைகள் 2020 நவம்பர் மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரை விநியோகிக்கப்பட்டன. நன்கொடைப் பொருட்களை விநியோகிப்பதற்கு 5,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவிக்கரம் நீட்டினர். இதனால் தென்மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 8,000 குடும்பங்கள் பலனடைந்தன. இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த மொத்த நன்கொடை $600,000ஐ தாண்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 103% அதிகம்.
சமூக மேம்பாட்டு மன்றம் இந்த நன்கொடைத் திட்டத்திற்காக முதன்முதலாக இணைய வர்த்தகர்களுடன் கைகோத்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக இணையத்தளங்கள் மூலம் வர்த்தகம் செய்வோரிடம் இருந்து $18,000க்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டன.
மேயர் லோ யென் லிங், நன்யாங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும், வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆங் வெய் நெங் மற்றும் தோட்டக்கலை தொழில்துறை சங்கத்தைச் சேர்ந்த தொண்டூழியர்களும் இணைந்து ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு தலா $70 மதிப்புள்ள விழாக்காலப் பரிசுப் பொட்டலங்களை நன்கொடையாக அளித்தனர்.
அதில் அரிசி, சாக்லெட், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
“இந்த கொவிட்-19 நெருக்கடி, நமது கொடுக்கும் ஆற்றலைத் தடுக்கவில்லை. மாறாக இந்த நெருக்கடி நம்மை ஒன்றிணைத்துள்ளது.
“இந்த ஆண்டு கிடைத்த நன்கொடையும், உதவி பங்காளர்களும் கடந்த ஆண்டிலும் இரு மடங்காகியுள்ளது.
“இதுவரையிலும் இல்லாத வகையில் 105 நிறுவனங்கள் மற்றும் சமூக பங்காளிகள் ஒன்றிணைந்து இந்த விழாக்கால நன்கொடைத் திட்டத்திற்குக் கைகொடுத்துள்ளன.
“சமூகங்களை ஒன்றிணைத்து நம்மிடம் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து நமது சமூகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தி, சவுத் வெஸ்ட் வட்டாரத்தை அனைவரையும் உள்ளடக்கிய அக்கறையுள்ள சமூகமாக ஆக்கும் பணியை சமூக மேம்பாட்டு மன்றம் தொடரும் என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சு மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சருமான லோ கூறினார்.