சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் பயணிகளின் விமானப் பயணப்பெட்டிகளின் எடையைக் குறைத்து மதிப்பிட்டு, லஞ்சம் பெற்றுக்கொண்டதற்காக நான்காவது நபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றத்திற்காக 25 வயது முகம்மது ஹாரிஸ் முகம்மது அலி என்பவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தண்டப்பணமாக $66 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
முன்பு ‘சேட்ஸ் ஆசிய-பசிபிக் ஸ்டார்’ நிறுவனத்தில் பணிபுரிந்த ஹாரிஸ், பயணிகளின் விமானப் பயணப்பெட்டிகளின் எடையைக் கணினி வழி பதிவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால், பொருட்களை மறுபடியும் பெட்டிக்குள் அடுக்கவோ அதிகமான எடைக்குக் கட்டணம் செலுத்தவோ ஹாரிஸ் பயணிக்கு அறிவுறுத்த வேண்டும்.
இருப்பினும், 2018ல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஹாரிஸ் $66 மதிப்பில் குறைந்தது ஆறு சிகரெட் பாக்கெட்டுகளை ஆமாட் என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் அதற்குப் பதிலாக ஸ்கூட் பயணிகள் சிலரின் பயணப்பெட்டி எடையைக் குறைத்து மதிப்பிட்டுக் கணினியில் பதிவிட்டதாகவும் கூறப்பட்டது. பல பயணிகளை ஆமாட் இவ்வாறு ஹாரிஸிடம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ஹாரிஸைத் தவிர ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்கிய மூவருக்கு 2019ல் தண்டனை விதிக்கப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணப்பெட்டிகள் தொடர்பில் வாடிக்கையாளர்களைத் தேடித்தரும் கும்பல் ஒன்றைப் பற்றி ‘தி நியூ பேப்பர்’ 2019ல் வெளியிட்ட செய்தியை அடுத்து, நால்வரின் குற்றமும் அம்பலமானது.
பின், ஸ்கூட் மற்றும் சேட்ஸ் தங்களின் சொந்த விசாரணையை மேற்கொண்டன. இவ்வாறு பயணப்பெட்டிகளின் எடையைக் குறைத்துப் பதிவிடுவதால் விமானத்தில் அதிகச் சுமை ஏற்றப்படலாம். அத்துடன் விமானப் பயணத்தின் பாதுகாப்புக்கும் உறுதி இருக்காது என லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இன்று தெரிவித்தது.
“சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்துவது, அதைவிட முக்கியமாக விமானப் பயணப் பாதுகாப்பைக் குறைப்பதாக உள்ளது இதுபோன்ற ஊழல் சம்பவங்கள்,” என லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.