நான்கு மாடி கிஸ்மிஸ் கோர்ட் கொண்டோமினியம் மீது மரம் ஒன்று விழுந்ததில் குறைந்தது மூன்று வீடுகளும் இரண்டு கார்களும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணி அளவில் நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தானும் தமது மனைவியும் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பெரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்ததாகவும் சேதமடைந்த வீட்டின் உரிமையாளரான 78 வயது திரு எலன் வூ தெரிவித்தார்.
மூடப்பட்டிருந்த தமது வீட்டுச் சன்னலின் மீது மரத்தின் கிளை விழுந்துகிடந்ததைப் பார்த்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.
சாய்ந்த மரம் குறைந்தது 40 ஆண்டுகளாக அங்கு இருந்ததாக அவர் கூறினார்.
மரம் விழுந்ததில் தமது வீட்டுத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்செடிகள் நசுங்கியதாக சேதமடைந்த மற்றொரு வீட்டின் உரிமையாளரான 84 வயது திருவாட்டி ஃபூ கவலை தெரிவித்தார்.
ஆனால் நல்ல வேளை யாரும் காயமடையவில்லை என்று அவர் கூறினார்.
விழுந்த மரத்தை ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து அகற்றினர்.