வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்டோர்
வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்ட 10ல் ஆறு ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் முந்தைய வேலையில் பெற்ற அதே சம்பளம் அல்லது அதைவிட அதிக சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.
மேலும், இத்திட்டத்தின்கீழ் வேலையில் சேர்க்கப்பட்டுள்ள 10ல் மூவர் முன்பு வேலையின்றி இருந்ததாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"இவர்களில் பெரும்பாலானோர் ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலையின்றி இருந்தனர்," என்றார் அவர்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இறுதிவரை வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வேலையில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளில் இத்திட்டமும் ஒன்று என்று அமைச்சர் டியோ சொன்னார்.
இவ்வாண்டு தமது அமைச்சு முன்னுரிமை அளிக்கும் மற்ற இரு பணிகளை அவர் பட்டியலிட்டார். முதலாவது, ஊழியரணியின் ஒவ்வொரு பிரிவும் வலுவாக உருவெடுப்பதற்கு உதவுவது. இரண்டாவது, வர்த்தக உருமாற்றத்திற்கு ஆதரவளிப்பது.
"நாம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய அம்சங்கள் ஒருபுறமிருக்க, இடைக்கால, நீண்டகாலப் பிரச்சினைகளிலும் கவனத்தை விட்டுவிடக்கூடாது.
"மின்னிலக்கமயம், வீட்டில் இருந்து வேலை செய்வது, பெருகி வரும் வருமான இடைவெளி, மூப்படைந்து வரும் ஊழியரணி போன்றவை நமக்குத் தொடர்ந்து சவாலாக விளங்கும்," என்று கூறிய அமைச்சர் டியோ, காலப்போக்கில் வேலை தரத்தை மேம்படுத்த முதலாளிகள் புத்தாக்க முயற்சிகளை முன்னெடுப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் 110,000க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்த அது ஆதரவளித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஊழியரணியில் ஏறக்குறைய 5 விழுக்காடு.
புதிய வேலைகளில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஏறத்தாழ பாதிப் பேர் 40 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.

