சிங்கப்பூர் பொருளியல் மீட்சி அடைந்து வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்தது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான வேலை விகிதம் கொவிட்-19க்கு முந்தைய நிலையைவிட சற்று அதிகரித்ததாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த ஜனவரியில் 3.2 விழுக்காடாக குறைந்தது என மனிதவள அமைச்சு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரியவந்து உள்ளது. கடந்த டிசம்பரில் அது 3.3 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரியில் 4.3 விழுக்காடாக குறைந்தது. டிசம்பரில் அது 4.4 விழுக்காடாக இருந்தது. இதற்கிடையே, சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் எந்த மாற்றமுமின்றி 4.5 விழுக்காடாக இருந்தது. ஜனவரியில் ஏறக்குறைய 101,900 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் வேலையின்றி இருந்தனர். அவர்களில் 89,300 பேர் சிங்கப்பூரர்கள்.
இதுகுறித்து அமைச்சர் டியோ கூறுகையில், "நெருக்கடி காலத்தில் நமது ஊழியரணி குறிப்பிடும்படியாக மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
"சிங்கப்பூர் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் கோரிக்கையை முதலாளிகள் ஏற்றனர்," என்றார்.
வேலை ஆதரவுத் திட்டம், எஸ்ஜி யுனைடெட் வேலை, திறன் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கோடிகாட்டிய அவர், சிங்கப்பூரர்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள அவை துணைபுரிந்ததாகச் சொன்னார்.
உள்ளூர்வாசிகளைப் பணி அமர்த்துவதற்கு உதவ வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டமும் கைகொடுத்துள்ளதை அவர் சுட்டினார்.