நிறுவனங்களில் வேலை உருமாற்றத்திற்கான செயல்திட்டங்களை உருவாக்க அடுத்த ஈராண்டுகளில் கிட்டத்தட்ட $10 மில்லியன் ஒதுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். மனிதவளம், தளவாடவியல், நிதிச் சேவை துறைகளில் மூன்று வேலை உருமாற்றத் திட்டங்கள் ஏற்கெனவே நிறைவுபெற்றுவிட்டன. மொத்த விற்பனை வர்த்தகம், சில்லறை விற்பனை, உணவு உற்பத்தி, தகவல் தொடர்பு, ஊடகம், விநியோகத் தொடர் நிர்வாகம், கணக்கியல், கட்டுமானம், நிலப் போக்குவரத்து, சுற்றுப்புறச் சேவை, சுற்றுப்பயணம் உள்ளிட்ட மேலும் 12 வேலை உருமாற்றத் திட்டங்களுக்கான திட்டங்களை மனிதவள அமைச்சு கொண்டு உள்ளது.
தானியக்கம் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களால் வேலை, திறன்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பது பற்றிய வேலை நிலை ஆய்வை இந்த வேலை உருமாற்றத் திட்டங்கள் வழங்கும்.
எடுத்துக்காட்டாக, தளவாடவியல் துறையில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தொழில்துறை 4.0 ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து 2019ஆம் ஆண்டில் அமைப்புகள்நிலைக் குழு ஒன்று ஆராய்ந்தது. இதில் ஏற்கெனவே உள்ள 56 வேலைகள் எப்படி உருமாறும் என்பதையும் 12 புதிய வேலைகள் உருவெடுக்கும் என்பதையும் அக்குழு அடையாளம் கண்டது.
தளவாடவியல் நிறுவனங்கள் இந்த ஆய்வின் கண்டுபிடிப்பில் இருந்து குறிப்பு எடுத்துக்கொண்டு புதிய திட்டங்களில் முதலீடு செய்து தங்கள் ஊழியர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து வருவதை அமைச்சர் டியோ சுட்டினார்.
"காலப்போக்கில் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குவதில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் குறுக்குவழி ஒன்றும் கிடையாது. நிறுவன நிலையில் இருந்து பார்க்கும்போது வேலை நடைமுறைகள் மாற வேண்டும் என்பதுடன் வேலைகள் மறுவடிவமைக்கப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.