முறையான உரிமம் இல்லாத வளாகத்தில் உள்ள கழிவறையிலிருந்து தண்ணீர்ப் புட்டிகளில் தண்ணீரை நிரப்பி விற்பனை செய்த தண்ணீர் நிறுவன முதலாளிக்கு $3,500 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டிரிங்க்ஸ்டார் என்டர்பிரைஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் லிம் லியன் சை, 70, கழிவறையில் உள்ள குழாயிலிருந்து தண்ணீரைப் பிடித்து தண்ணீர்ப் புட்டிகளில் நிரப்பி அவற்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினார்.
இது குறித்து பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த சிங்கப்பூர் உணவு வாரியம், 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சம்பந்தப்பட்ட வளாகத்தில் விசாரணை நடத்தியது.
அப்போது 19 லிட்டர் கொள்ளளவுடைய தண்ணீர்ப்புட்டிகளும் தண்ணீர் விநியோகிக்கும் சாதனங்களும் 55 சிராங்கூன் நார்த் அவென்யூ 4ல் உள்ள அந்த நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.