சிக்கலில் இருக்கும் நொவினா குளோபல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணை நிறுவனமான நொவு எஸ்தெட்டிக்ஸ் மருந்தகக் குழுமத்திடம் போதிய நிதிவளம் இல்லாததால் மருத்துவர்கள் வேலைமுறைப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்; ஊழியர்கள் சிலர் ஊதியம் பெறாமலேயே வேலையைவிட்டுச் சென்றுவிட்டனர்; நோயாளிகள் சிகிச்சைக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை.
ராஃபிள்ஸ் சிட்டியிலும் நார்த்பாய்ண்ட் கடைத்தொகுதியிலும் இருந்த அதன் இரு மருந்தகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதை ஸ்ட்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் செய்தி உறுதிப்படுத்தியது.
நொவு வணிகச்சின்னத்தின்கீழ் செயல்படும் நொவு எஸ்தெட்டிக்ஸ் மருந்தகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மீது கடந்த பிப்ரவரி 1 முதல் நேற்று முன்தினம் வரை 35 புகார்கள் வந்திருப்பதாகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) தெரிவித்தது.
அந்தப் புகார்களின் ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்பு 43,000 வெள்ளிக்கு மேல் என்று 'கேஸ்' அமைப்பின் தலைவர் லிம் பியாவ் சுவான் குறிப்பிட்டார்.
"சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் தங்களால் சிகிச்சை அமர்வுகளுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை என்பதே பெரும்பாலானோரின் புகாராக இருக்கிறது. புகார்கள் தொடர்பில் தீர்வுகாண நொவு எஸ்தெட்டிக்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளோம். இன்னும் அதனிடமிருந்து பதில் வரவில்லை," என்று திரு லிம் கூறினார்.
253 சிராங்கூன் சென்ட்ரல் டிரைவ், பிடோக் கடைத்தொகுதி, ஜெம் கடைத்தொகுதி, ஜூரோங் பாய்ஸ்ட் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நொவு எஸ்தெட்டிக்சின் மற்ற நான்கு மருந்தகங்கள் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"பொதுவாக, வர்த்தகங்கள் நொடித்துப் போகும் பட்சத்தில், முன்கூட்டியே செலுத்திய பணத்தைப் பயனீட்டாளர்கள் திரும்பப் பெறுவது என்பது சவாலானது. ஆகையால், இப்போதைய பொருளியல் சூழலில், முன்பணம் செலுத்தும்போது விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனப் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்," என்றார் திரு லிம்.
இதனிடையே, நிதிநிலை அறிக்கைகளில் 'எர்ன்ஸ்ட் அண்ட் யங்' கணக்கியல் நிறுவனத்தின் போலியான கையெழுத்துகளைப் பயன்படுத்தியது தொடர்பில் நொவினா குளோபல் ஹெல்த்கேர் குழுமத்திடம் போலிஸ் விசாரித்து வருகிறது.

