பிரிட்டன் மாணவி ஒருவர் கொவிட்-19 விதியை அலட்சியம் செய்ததன் தொடர்பில் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
எஸ்தர் டான் லிங் யிங், 24, (படம்) என்னும் அவர் கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார். அதற்கு சில தினங்கள் முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான இல்லத் தனிமை உத்தரவை சிங்கப்பூர் பிறப்பித்திருந்தது. சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் அவர் பிரிட்டனில் இருந்து வந்ததாகவும் பின்னர் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இல்லத்தனிமை உத்தரவை மீறி சாங்கி விமான நிலையம் 1ஆம் முனையத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றார். பின்னர் அதே நாளில் கிளமெண்டியில் ஒரு மருத்துவரைச் சென்று பார்த்தபோது தமது பயண விவரங்களை பொய்யாகத் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று நீதிமன்ற விசாரணையின்போது அரசுத்தரப்பு துணை வழக்கறிஞர் சஞ்சீவ் வஸ்வானி கூறுகையில், "ஒருசிலர் மட்டும் விதிகள் தங்களுக்கானவை அல்ல என்று கருதுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் டானும் அவர்களில் ஒருவர்," என்றார்.
குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி ஒருவர் நேற்று சாட்சியாக முன்னிலை ஆனார். 2020 மார்ச் 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் நாடு திரும்பிய பயணிகள் பற்றிய விவரங்களை அவர் தெரிவித்தார்.
ஆனால் அன்றைய தினம் 14 நாள் இல்லத்தனிமை உத்தரவு பற்றி தெளிவான தகவல் இல்லை என்றும் அது எவ்வாறு செயல்படும் என குடிநுழைவு சோதனைச்சவாடி ஆணைய அதிகாரிகளுக்குக்கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தற்காப்பு வழக்கறிஞர் டான் செங் கியோங் வாதிட்டார்.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் மற்றவர்களுக்கு கொவிட்-19 நோயைப் பரப்பிவிடும் அபாயத்தை உருவாக்கியதாக அந்த மாணவி மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். விசாரணை தொடருகிறது.

