டெலிகிராம் செயலியில் 'எஸ்ஜி நாசி லெமாக்' எனும் உரையாடல் குழுவை நிர்வகித்த லியோங் தியென்வெய், 39, என்பவரின் மின்னிலக்கச் சாதனங்களில் 11,000க்கும் அதிகமான ஆபாசப் புகைப்படங்கள், காணொளிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு நேற்று ஒன்பது வாரச் சிறைத் தண்டனையும் $26,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இரு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், குற்றங்களைப் புரிந்த சமயத்தில் வேலையின்றி இருந்தார்.
2019 மார்ச் முதல் அக்டோபர் வரை 'எஸ்ஜி நாசி லெமாக்' குழுக்கு எதிராக போலிசிடம் 31 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
ஆபாசப் புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிரும் தளமாக அந்தக் குழு பயன்படுத்தப்பட்டது. 2018 நவம்பரில் உருவாக்கப்பட்ட அந்தக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 44,000ஆக உயர்ந்தது.
2019 அக்டோபர் 14ஆம் தேதி போலிஸ் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது லியோங் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். லியோங்கின் மடிக்கணினியையும் ஐந்து கைபேசிகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

