தாவர அடிப்படையிலான சைவ கோழிக்கறி உணவுகள் சிங்கப்பூரின் 11 உணவு நிறுவனங்களில் வரும் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
அண்மையில் $13.4 மில்லியன் நிதியைத் திரட்டிய 'நெக்ஸ்ட் ஜென் ஃபூட்ஸ்' நிறுவனம் 'டிண்டல்' எனப் பெயரிடப்பட்டுள்ள சைவ கோழிக் கறியை விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
அந்த நிறுவனம் தயாரித்த 'டிண்டல் தை' எனும் சைவ கோழிக்கறி தண்ணீர், சோயா, தேங்காய்க் கொழுப்பு, சூரியகாந்தி எண்ணெய் உட்பட 9 பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. 'லிபி' எனப்படும் அந்த நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான தாவர அடிப்படையிலான கொழுப்புகள் மற்றும் வாசனைப் பொருளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் 'ஆரோக்கியமான தெரிவு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கோழிக்கறியில் 'ஆன்டிபயோட்டிக்', 'ஹார்மோன்' போன்றவை இல்லை. இதில் பூரித கொழுப்பின் அளவும் சோடியத்தின் அளவும் குறைவு.
ராபர்ட்சன் கீயில் உள்ள 'திரி பன்ஸ்', பீச் ரோட்டில் இருக்கும் 'அட்டா' எனும் இந்திய உணவகம், 10 உணவுக் கடைகளைக் கொண்டுள்ள 'பிரைவ்' கடைத் தொகுப்பு, தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள 'தி மார்க்கெட் கிரில்', ஓஷியன் ஃபைனான்ஷியல் சென்டரில் இருக்கும் 'தி குட்பர்கர்' உட்பட 11 உணவு நிறுவனங்களின் உணவகங்களில் இந்த சைவ கோழிக்கறியைப் பயன்படுத்தி விதவிதமான உணவுகள் விற்கப்படும்.

