குறைந்த வருமானக் குடும்பங்கள், மூத்தோர், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு 100,000க்கும் மேற்பட்ட போத்தல்களில் வைட்டமின் ‘டி’ மாத்திரைகளைத் தான் இலவசமாக வழங்கவிருப்பதாக தெமாசெக் அறநிறுவனம் இன்று (மார்ச் 12) தெரிவித்துள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாத்திரைகளை அது வழங்கும்.
நீல அல்லது ஆரஞ்சு நீற சமூக சுகாதார உதவித்திட்ட (சாஸ்) அட்டைகளை வைத்திருக்கும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் பொது உதவித் திட்டத்தின்கீழ் உள்ளவர்களும் வைட்டமின் ‘டி3’ மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பங்குபெறும் கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் மருந்தகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.
பிரசவத்திற்கு முந்திய பராமரிப்புப் பெறும் ஏறக்குறைய 5,000 கர்ப்பிணிகளுக்கு இந்த மாத்திரைகளை கேகே மகளிர், சிறார் மருத்துவமனை வழங்கும்.
எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏறக்குறைய 1,500 மூத்தோருக்கு ‘சாட்டா காம்ஹெல்த்’ இந்த மாத்திரைகளை வழங்கும்.
கொவிட்-19 சூழலில் தெமாசெக் அறநிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்று.
போதுமான வைட்டமின் ‘டி’ பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் #StrongerWithSunshine இயக்கத்தையும் தெமாசெக் அறநிறுவனம் தொடங்கவுள்ளது.