கொவிட்-19 கிருமித்தொற்று 2020ன் தொடக்கத்தில் சிங்கப்பூரைப் பாதிக்கத் தொடங்கியபோது உதவி தேவைப்படும் சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சவால்கள் எழுந்தன.
குடும்பங்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதில் சிண்டாவுக்கு உதவ 1,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள், பள்ளிகள் ஆகியோரின் பங்களிப்பு உறுதுணையாக இருந்தது.
சமூகத்தினரின் வாழ்வில் நேர்மறையான மாறுதலை ஏற்படுத்திய இவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சிண்டா நேற்று பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை இணை யம் வழி நடத்தியது.
பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சர் மற்றும் சிண்டா நிர்வாகக் குழுத் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். சிண்டாவின் முதுகெலும்பாக தொண்டூழியர்கள் உள்ளதாகவும் புதிய திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை வரைந்தாலும் மக்களைச் சென்றடைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் பணி தொண்டூழியர்கள் வசமே உள்ளது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு சமூகப் பங்காளிகள், பள்ளிகள், தொண்டூழியர்கள், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கும் சிண்டாவின் துணைக்குழுவினர் என 4 பிரிவுகளில் மொத்தம் 208 விருதுகள் வழங்கப்பட்டன.
சமூகப் பங்காளி பிரிவில், சொங் பாங் மக்கள் கழக இந்தியர் நற்பணிக் செயற்குழு அங்கீகரிக்கப்பட்டது.
“சொங் பாங் வட்டார வீடுகளுக்குச் சென்று, பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்கள் உதவி நாடுவதற்கு சிண்டாவை பரிந்துரைத்தோம். வேலை தேடுதல், வசதி குறைந்த பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு துணைப்பாட வகுப்பு ஏற்பாடுகள், முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குதல் என பல்வேறு தீர்வுகளுக்கு சிண்டா வழி
வகுக்க, அத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று கூறினார் சொங் பாங் மக்கள் கழக இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு ரா.சுப்பிரமணியம், 57.
தொண்டூழியர் பிரிவில், சிண்டாவின் இளையர் மன்ற துணைத் தலைவர் 38 வயது திரு ராகுல் தஸ்வானி கெளரவிக்கப்பட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து சிண்டாவின் இளையர் நடவடிக்கைகளில் தொண்டூழியம் புரிந்து வரும் இவர், இளையர்கள் மேற்படிப்பு முடித்து வேலைக்குச் செல்லும்போது அதற்குரிய மாற்றங்களுக்கு அவர்கள் தயாராக இருப்பதில் கவனம் செலுத்தினார்.
“எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிப்பது, கருத்துகளை வெளிப்
படையாகப் பகிர்ந்துகொள்வது போன்ற உத்திகளை தொண்டூழிய அனுபவம் வழி கற்றுக்கொண்டேன். மற்ற இளையர்களையும் தொண்டூழியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற உற்சாகத்தை இவ்விருது அளிக்கிறது,” என்று கூறினார் தொண்டூழியர் பிரிவில் விருது பெற்ற குமாரி அ. சிவகாமி, 19.
“தொண்டூழிய முயற்சிகளை கொண்டாடுகையில், சமூகத்தை முன்னுக்கு கொண்டு செல்ல இன்னும் கூடுதலான சமூகப் பங்காளிகளும் தொண்டூழியர்களும் சிண்டாவுடன் இணைவர் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா.அன்பரசு.
மூத்த அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான திரு தர்மன் சண்முக ரத்னமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.