சிங்கப்பூர் பூமலையில் காலனித்துவ ஆட்சிக்கால பங்களா கட்டடம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கலையம்ச பொருட்கள் காட்சிக்கு இடம்பெற்று இருக்கின்றன. 'கேலப் ஹவுஸ் எண் 7' என்ற கட்டடத்தை பூமலை கலைக்கூடமாக தேசிய பூங்காக் கழகம் மாற்றி இருக்கிறது.
பூமலையின் ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட ஓவியங்களும் வண்ண வரைபடங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.
சமகால ஓவியக் கலைஞர்களின் சில படைப்புகளும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறி மாறி அங்கு காட்சிப்படுத்தப்படும். எந்தவொரு நேரத்திலும் ஏறத்தாழ 100 படைப்புகளை அங்கு காணலாம்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்த பல அம்சங்களில் அந்தக் காலைக்கூடமும் ஒன்று.
பூமலையின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. 'கேலப் ஹவுஸ் எண் 5'ம் புதிய நோக்கத்துடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது 1898ல் கட்டப்பட்டது. காலனித்துவ காலத்தைப் பறைசாற்றும் ஆகப் பழைய பங்களா இதுவே என்று தெரிகிறது.
அது இப்போது காட்டுவளக் கண்டுபிடிப்பு மையமாகத் திகழ்கிறது. இந்த மையம் ஓசிபிசி ஆய்வுத் தோட்டத்தில் அமைந்துள்ளது.
ஆய்வுப் பணிகளுக்கான இடமாகவும் அது திகழ்கிறது.
பூமலையில் விளையாட்டுத் திடல் ஒன்றும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. அதில் சிறார்கள் விளையாடி மகிழ பிரம்மாண்ட மரம் போன்ற ஏற்பாடுகள் உள்ளன.
பூமலை மொத்தம் 8 ஹெக்டர் பரப்பளவில் இப்போது விரிவாக்கம் பெற்று இருக்கிறது.
இதையும் சேர்த்து 82 ஹெக்டர் நிலப்பரப்பில் பரவி பூமலை அமைந்துள்ளது. அதில் பல புதுமை களும் இடம்பெற்றுள்ளன.

