விருப்பத்துக்கு ஏற்ப வேலை செய்யும் துணைப்பாட ஆசிரியர் ஒருவர், 13க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் புரிந்ததை இன்று (மார்ச் 15) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரரான 43 வயது சோக் சூன் செங், வயது குறைந்த சிறுவர்களைப் பாலியல் செயலுக்கு உட்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 14 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.
'லோகாண்டோ' சமூகத் தளம் மூலம் அறிமுகமான 15 வயது சிறுவன் ஒருவனைச் சம்மதிக்க வைத்து அவனுடன் சோக் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் 13 வயது சிறுவன் ஒருவனை 'கிரிண்டர்' எனும் சமூகத் தளத்தில் 2018ல் சந்தித்தார். அதையடுத்து இருவரும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோக்கின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அப்போது அந்த 13 வயது சிறுவனின் தாயார், தமது மகனின் கைபேசியில் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பான உரையாடல்களைக் கண்டுபிடித்ததை அடுத்து, போலிசிடம் அவர் புகார் அளித்தார். அதையடுத்து அதிகாரிகள் சோக்கை கைது செய்தனர்.
ஏற்கெனவே 2010லும் 2014லும் பாலியல் குற்றங்களுக்காக சோக் தண்டிக்கப்பட்டார்.
சோக் மீண்டும் குற்றம் புரிய வாய்ப்பு உள்ளதால் அவரை சீர்திருத்தப் பயிற்சிக்கு உட்படுத்தவும் தடுப்புக்காவலில் அவரை வைக்கவும் சாத்தியத்தை ஆராய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சோக்கிற்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு சீர்திருத்தப் பயிற்சி 14 ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ், 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம்.