சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
புதிதாகக் கிருமி தொற்றியோரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,117ஆகக் கூடியது.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்று அமைச்சு அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேருக்குக் கிருமித்தொற்று இருந்ததாக அமைச்சு அறிவித்து இருந்தது. அவர்கள் அனைவருமே தனிமையில் இருந்தபோது பரிசோதனை நடத்தப்பட்டது.
இருவரிடம் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்களிடம் அறிகுறிகள் தென்படவில்லை.
இதனிடையே, சமூகத்தில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை கடந்த வாரம் இரண்டாகக் குறைந்தது என்றும் அமைச்சு கூறியது. சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மொத்தம் 30 பேர் பலியாகிவிட்டனர்.
இவ்வேளையில், கொவிட்-19 கிருமியைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் அரசாங்க சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
500,000க்கும் மேற்பட்ட மக்கள் குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதத்தில் 60 முதல் 69 வயதுள்ளவர்கள் வரை தடுப்பூசி போடுவதில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும்.
கல்வி போன்ற முன்னுரிமை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தடுப்பூசி மேலும் கிடைக்கும் போது இந்தச் செயல்திட்டம் வேகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

