மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் புதிய வழிகாட்டி ஒன்றை தேசிய சமூக சேவை மன்றம் (என்சிஎஸ்எஸ்) வெளியிட்டுள்ளது. மனநலம் தொடர்பான செய்திகளை எழுதும்போது தவிர்க்கப்படவேண்டிய சொற்களும் தொடர்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு, 'மனநலம் சரியில்லாதவர்', 'பைத்தியம்' போன்றவற்றைக் காட்டிலும் 'மனநலப் பிரச்சினை உள்ளவர்' என்ற தொடரே சிறப்பு.
மேலும் 'பியோண்ட் தி லேபல் மீடியா கைட்' என்ற இந்த வழிகாட்டி புத்தகத்தில் மனநலப் பிரச்சினை உள்ள ஒருவரை நேர்காணலுக்கு அணுகும்போது அவரிடம் எவ்வாறு கேள்வி கேட்பது, செய்தியை எந்தக் கோணத்திலிருந்து எழுதுவது, செய்திக்குத் தலைப்பு எவ்வாறு இடுவது, வன்முறை மற்றும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி செய்தி எழுதும் முறை ஆகியவை குறித்து ஆலோசனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமூகச் சேவை அமைப்புகள், மனநல சுகாதார நிபுணர்கள், மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், உள்ளூர் ஊடகத் துறையினர் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டது.
மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்பில் சம்பவங்களைப் பற்றியோ, மனநலம் தொடர்பான விவகாரங்கள் பற்றியோ ஊடகத்துறை நிபுணர்கள் எழுதும்போது இவ்வழிகாட்டி புத்தகம், தகுந்த பரிந்துரைகளை அளிக்கும் என்றார் என்சிஎஸ்எசின் தலைவர் திருவாட்டி அனிதா ஃபேம்.
"மனநலம் பற்றிய விழிப்புணர்வுடன் மக்களின் தவறான சிந்தனையை மாற்ற ஊக்குவிக்கவும் அவர்களின் மனப்போக்கு, நடத்தை ஆகியவற்றில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும் ஊடகத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய களங்கமும் ஒரு சிக்கலாக உள்ளதை மக்கள் அறிவர்," என்றார் திருவாட்டி ஃபேம்.
மனநலம் தொடர்பான செய்தி அறிக்கைகளில் 40% குற்றச்செயல் தொடர்பாக இருந்ததாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்துடன் என்சிஎஸ்எஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாறாக, 15% மட்டுமே பராமரிப்பு, தடுப்பு, மீண்டு வருதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்ததாக ஆய்வு கூறியது. மனநோயையும் குற்றச்செயலையும் மக்கள் தொடர்புபடுத்த இது காரணமாக அமைந்திடலாம் என்றது என்சிஎஸ்எஸ்.
2016க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த 2,000 உள்ளூர் ஊடகச் செய்திகள் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன.
மேலும், 'மனநலம் சரியில்லாதவர்' போன்ற தவிர்க்கப்பட வேண்டிய தொடர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பாக தலைப்புகளில் அவை இடம்பெற்றதாகவும் ஆய்வு கண்டறிந்தது.
'தோல் பிரச்சினை, புற்றுநோய் என உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர், இன்னொருவரைத் தாக்கினார்' என்று நாம் கூறாதபோது ஏன் மனநோயைப் பற்றி குறிப்பிட வேண்டும் என வினவினார் லாப நோக்கற்ற சில்வர் ரிப்பன்அமைப்பின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி போர்ஷா போ.
மனநலம் தொடர்பில் ஆக்கபூர்வமான செய்திகளை வெளியிடுவதன் வழி, இத்தகைய பிரச்சினைகள் உள்ளோர் தங்களின் வாழ்க்கையை பயன்மிக்கதாக்கிக் கொள்ள ஊக்கம் பெறுவர் என்றார் திருவாட்டி போ.
கொள்ளைநோய்ச் சூழலில் மனநல
உதவி கோரிக்கைகள் அதிகரித்தன
உயிரை மாய்த்துக்கொள்ளுதல், துயரம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்திற்கு (எஸ்ஓஎஸ்) சென்ற ஆண்டு 39,492 அழைப்புகள் வந்தன.சங்கத்திற்கு 2019ஆம் ஆண்டில் வந்த அழைப்புகள் 33,387. கொள்ளைநோய்ச் சூழலில் மேலும் 18% மக்களுக்கு மனநலப் பாதிப்பு தொடர்பில் உதவி தேவைப்பட்டது
சென்ற ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் உதவி கோரி சங்கத்திற்கு 10,671 அழைப்புகள் வந்தன. கிருமிப்பரவல் முறியடிப்புக் காலகட்டமும் பொருளியலை மீண்டும் திறக்கும் முதல் கட்டமும் இந்த மாதங்களில்தான் இடம்பெற்றன. இதே மூன்று மாதங்களில் 2019ஆம் ஆண்டில் 7,844 அழைப்புகள் மட்டுமே பதிவாகின.
வாழ்க்கைத் துணை, குடும்ப உறுப்பினர்களுடன் மேலும் அதிக மோதல்கள் ஏற்பட்டதாக சங்கத்திற்கு அழைத்தவர்கள் கூறியிருந்தனர். நிதி நெருக்கடி, வேலை இழப்பு ஆகியவையும் மன அழுத்தம் தந்த குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருந்தன என்றும் ஒரு நபரின் சுய மதிப்பைக் குறைக்கும் வண்ணம் இவை இருந்தன என்றும் கூறப்பட்டது.
துயரத்தில் இருப்போருக்கு உதவ 'கேர்டெக்ஸ்ட்' என்ற குறுஞ்செய்தி அனுப்பும் சேவையைச் சென்ற அக்டோபர் மாதத்தில் சங்கம் தொடங்கி வைத்தது. இதுவரை 3,000 உரையாடல்கள் இதன் மூலம் இடம்பெற்றுள்ளன. 29 வயதும் அதற்குக் குறைந்த வயதுடையோருமே சேவையைப் பயன்படுத்தியோரில் பெரும்பான்மையினர்.
மனநலம் தொடர்பில் இயங்கி வரும் மற்ற அமைப்புகளுக்கும் உதவி கோரி வந்த அழைப்புகள் அதிகரித்திருந்தன. சிங்கப்பூர் ஆலோசனை நிலையத்திடம் உதவி நாடி வந்தவர்கள் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் 40% அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

