இர்ஷாத் முஹம்மது
சக்தி, எரிவாயு ஊழியர் தொழிற்சங்கத்தின் கௌரவ முன்னாள் பொதுச் செயலாளார் நாச்சியப்பன் ஆர்.கே.சின்னையா நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 67.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஆறு வாரங்களாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உயிர் நேற்று காலை 11.57 மணிக்குப் பிரிந்தது என்று அவரது சகோதரி மாலா எனும் எஸ்.மரகதம் தெரிவித்தார். மனைவி ந.வனஜா, மகள் ந.ரோகினி, தாயார் சின்னையா ராஜலெட்சுமி, சகோதரர்கள், சகோதரிகளை அவர் விட்டுச்சென்றார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்கத்திற்குச் சேவையாற்றிய உன்னத மனிதரை இழந்துவிட்டதாகக் கூறினார் சக்தி, எரிவாயு ஊழியர் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் எஸ்.தியாகராஜன், 58. ஊழியர்களுக்காக தன்னலமற்ற ஈடுபாட்டுடன் உழைத்தவர் சகோதரர் நாச்சி என்று புகழாரம் சூட்டினார் அவர்.
"மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும் தொழிற்சங்கத்தைப் பற்றிய சிந்தனையுடனே இருந்தார். ஊழியர்களின் மறு வேலைவாய்ப்புப் பற்றிப் பேசினார். அரசாங்கம், நிர்வாகம், பங்காளிகள் என அனைவரதும் மரியாதையைப் பெற்ற திறன்மிக்க, அருமையான மனிதர் அவர்," என்றார் அவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு திரு நாச்சியப்பன் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். எனினும், கௌரவ முன்னாள் பொதுச் செயலாளர் என்ற பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. அவர், தொடர்ந்து இளம் தொழிற்சங்கவாதிகளுக்கு ஆலோசனை வழங்கிவந்தார்.
ஊழியர்களுக்காகவும் தொழிற்சங்கத்திற்காகவும் ஊழியரணியின் சகோதர சகோதரிகளுக்காகவும் சிங்கப்பூருக்காகவும் சேவை செய்வதில் தமது வாழ்வை அர்ப்பணித்தவர் சகோதரர் நாச்சி என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் திருவாட்டி மேரி லியூவும் பொதுச் செயலாளர் இங் சீ மெங்கும் இணைந்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.
ஊழியர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் சிரமப் படும், பாதிக்கப்பட்டக்கூடிய ஊழியர்களை அடையாளம் கண்டு முழுமூச்சாக அவர்களுக்கு உதவ முன்வரும் நல்லுள்ளம் கொண்டவர் என்று இரங்கல் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அவருக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை விருந்தில் அதிபர் ஹலிமா யாக்கோப், திருவாட்டி ஹோ சிங், அமைச்சர் லாரன்ஸ் வோங், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திரு இங் சீ மெங் முதலியோர் கலந்துகொண்டனர்.
'எஸ்பி' குழுமத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்கு அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வோங் கிம் யின் அந்த நிகழ்ச்சியில் பரிசளித்தார்.
அரசாங்கம், தொழிற்சங்கம், நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே வலுவான, நம்பிக்கையான முத்தரப்பு உறவை உருவாக்க நாச்சி இன்றியமையாத பங்கு வகித்துள்ளார் என்று எஸ்பி குழுமம் அன்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திரு நாச்சியப்பன் பற்றி பதிவிட்டிருந்தது.
அவரது உன்னத சேவைக்காக 2011ஆம் ஆண்டு பொதுச் சேவை விருதும் 2014ஆம் ஆண்டு மே தின தொழிலாளர் தோழர் (நட்சத்திர) விருதும் வழங்கப்பட்டுள்ளது.
"அவர் மறைந்த செய்தி அறிந்து எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நானும் அவரும் தொழிற்சங்கத்தில் ஒரே காலகட்டத்தில்தான் சேர்ந்தோம். அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். அவர் தனது உழைப்பு முழுவதையும் தொழிற்சங்கத்திற்கே அர்ப்பணித்தார். தமிழில் சரளமாகப் பேசக்கூடிய அருமையான நண்பரை நாம் இழந்தோம்," என்று கூறினார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் பெட்ரோல் துறை ஊழியர் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளருமான திரு கே. கார்த்திகேயன்.
"மரியாதைக்குரிய தொழிற்சங்க தலைவர் திரு நாச்சியப்பனின் மறைவு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட சகோதரர்," என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.
திரு நாச்சியப்பனின் உடல் லவெண்டர் ஸ்திரீட்டிலுள்ள சிங்கப்பூர் காஸ்கெட் கட்டடத்தின் ரூபி அரங்கில் இன்று மாலை 5 மணி வரை மரியாதை செலுத்த வைக்கப்பட்டிருக்கும்.
இன்று மாலை 5.30 மணிக்கு மாண்டாய் தகனச்சாலைக்கு தகனம் செய்ய எடுத்துச்செல்லப்படும்.

