தொழில்நுட்பத்தைப் பற்றி அதிகம் அறிந்திராத ஒருவருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்றால் என்ன என்பதை உணர்த்த, இன்டெல் நிறுவனம் உருவாக்கிய பயிற்சி வகுப்பை உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூர் வழங்கவுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இந்த நான்கு மணி நேர நுண்நிலைக் கற்றல் வகுப்பின் பெயர், 'ஏஐ ஃபார் சிட்டிசன்ஸ்'. குனோபி சுய கற்றல் தளம், தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து இப்புதிய திட்டத்தை நேற்றுத் தொடங்கி வைத்தது.
"செயற்கை நுண்ணறிவு என்பது அறிவாளிகளுக்கு மட்டுமே என்ற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. அதனால் 'ஏஐ' என்று வரும்போது அச்சப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்," என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழக (மேற்கு) வளாகத்தைச் சேர்ந்த திரு தோங் சீ சுங்.
அவரவர் வேகத்திற்கு ஏற்ப கற்றலை மேற்கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்பு அமைந்துள்ளது. ஏஐ என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வு, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருத்தல், ஏஐ பற்றிய தவறான எண்ணங்களை மாற்றுதல் போன்ற அம்சங்கள் பயிற்சி வகுப்பில் அமைந்திருக்கும். ஏஐ பற்றிய முன்னறிவே இல்லாதோருக்கென உருவாக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பு, மாணவர் முதல் முதியோர் வரை பலனளிக்கக்கூடியது. ஒரு சிறிய புதிரோடு அமைந்த இப்பயிற்சி வகுப்பை முடிப்பவர்க்கு, பெயர் குறிப்பிடப்பட்ட மின்னிலக்க வில்லைகள் வழங்கப்படும்.
ஊழியர் அணியின் மின்னிலக்க உருமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்தி வருவதால் பயிற்சி வகுப்பைத் தொடங்க சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்ததாக இன்டெல் நிறுவனத்தைச் சேர்ந்த திரு சந்தோஷ் விஸ்வநாதன் கூறினார்.