உயர்தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் முறை உள்ளூரிலேயே தேவை அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் விளைச்சல் பெற கைகொடுக்கும் என்றும் இப்போதைக்கு இல்லாவிட்டாலும் எப்போதாவது இது நமக்கு உதவும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
"இதுபோன்ற திறன்களை நாம் வளர்த்துக்கொண்டுவிட்டால் தேவை ஏற்படும்போது உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்," என அவர் லிம் சூ காங் 'ஸ்கை கிரீன்ஸ்' செங்குத்து காய்கறித் தோட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
புதிய வகை நுண்வேளாண் முறை இந்தத் தோட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. செங்குத்து காய்கறித் தோட்டம், மீன்வளர்ப்பு ஆகியவற்றோடு தேவைக்கேற்ற வகையில் கையிருப்பு வைத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றை நுண்வேளாண்மை முறை உள்ளடக்கும்.
"பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய் பரவல் அல்லது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக, உள்ளூரில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களுக்கான தேவை திடீரென அதிகரிக்கும்போது அதற்கேற்ற வகையில் உற்பத்திையப் பெருக்குவது எப்படி என்பதை சிங்கப்பூர் அறிந்திருக்கும். உலகளவிலான உணவு முறை வெவ்வேறு வகை சவால்களை எதிர்நோக்கி உள்ளது. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உயர்தரமான, விலை கட்டுப்படியாகக்கூடிய உணவை அளிக்கும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவை உள்ளது. அதேவேளை விநியோகத் தொடரை மீட்டெடுப்பதை உறுதி செய்வதும் முக்கியம். இதுபோன்ற தீர்வுகாணப்படாத அம்சங்கள் கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் காலத்தில் உணரப்பட்டன.
"உணவு விநிேயாகத்தைப் பாதுகாக்க சிங்கப்பூர் மூன்று உத்திகளை தீட்டி வருகிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடுகளிலிருந்தும் வட்டாரங்களிலிருந்தும் இறக்குமதி செய்வது; உள்ளூரில் உற்பத்தியைப் பெருக்கி போதுமான கையிருப்பு வைத்துக்கொள்வது; சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் ஒட்டுமொத்த உணவு விநியோகத்திற்கான ஒவ்வொரு உத்திக்கும் பங்களிப்பது-ஆகியன அந்த உத்திகள்.
"பதற்றமில்லாத வேளைகளில் வெளிநாட்டு இறக்குமதிக்கான பலதரப்பட்ட வழிகளை சிங்கப்பூர் கையாள முடியும். அப்போதுகூட நமது உள்நாட்டு வேளாண்-தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வதில் சிங்கப்பூர் முதலீடு செய்யும். ஆயினும் அவற்றில் ஓர் அளவுக்கு மேல் செல்லமுடியாமல் போகக்கூடும். காரணம், பல்வேறு வகையான போட்டித்தன்மை
யுடனான வளங்கள் நம்வசம் உள்ளன. அதேநேரம், உலகச்சூழல் திடீரென தலைகீழ் மாற்றம் கண்டு, வெளிநாட்டு விநியோகங்கள் நம்மை வந்து சேரமுடியாத நிலை ஏற்படும்போது உள்ளூர் உற்பத்தியை நாம் பெறக்கூடிய திறன்களை வளர்த்திருக்க வேண்டும்," என்று திரு சான் விளக்கினார்.

