முந்திய மந்தநிலைகளின்போது இருந்ததைக் காட்டிலும் கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் விகிதம் குறைவு என்று மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
2001 'டாட்.காம்' பிரச்சினை, 1998 ஆசியப் பொருளியல் நெருக்கடி காலகட்டங்களில் அதிகமான ஊழியர்கள் வேலையிழந்தனர். அதன்பிறகு, கடந்த ஆண்டில்தான் அதிகளவு ஊழியர்கள் வேலை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2019ல் 10,690 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், 2020ல் 26,110 பேர் அந்நடவடிக்கைக்கு ஆளாகினர்.
சென்ற ஆண்டில் ஆயிரம் ஊழியர்களில் 12.8 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். முந்திய மந்தநிலைகளின்போது இந்த விகிதம், சராசரியாக ஆயிரம் ஊழியர்களுக்கு 22.5 பேர் என்றிருந்தது.
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளைக் காட்டிலும் வெளிநாட்டினரே ஆட்குறைப்பால் அதிகம் பாதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகளில் ஆயிரத்திற்கு 11.1 பேர் என்றிருந்த ஆட்குறைப்பு விகிதம், வெளிநாட்டினரிடத்தில் ஆயிரத்திற்கு 15.7 பேர் என்றிருந்தது.
சேவைத் துறை ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆட்குறைப்பு செய்யப்பட்டோரில் 76 விழுக்காட்டினர், அதாவது 19,760 பேர் அத்துறையைச் சேர்ந்தவர்கள்.
மொத்த விற்பனை, கலைகள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் அடங்குவர்.
எழுத்துப்பணி, விற்பனை, சேவை ஊழியர்களே அதிகம் ஆட்குறைப்பிற்கு இலக்கானதாகக் கூறப்பட்டது.
50 வயதுகளில் இருந்த மூத்த ஊழியர்களே ஆட்குறைப்பு செய்யப்பட அதிக வாய்ப்பு நிலவியதாகக் கூறப்பட்டது.
அதேபோல, கடந்த ஆண்டில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு ஆளாக அதிக வாய்ப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது.
ஆட்குறைப்பிற்கு ஆளானோர் வேறு வேலை தேடிக்கொள்வதற்கான காலமும் அதிகரித்தது. 2019ல் வேலையிழந்த ஆறு மாதங்களுக்குள் 64 விழுக்காட்டினர் புதிய வேலை தேடிக்கொண்ட நிலையில், 2020ல் அவ்விகிதம் 62 விழுக்காடாகக் குறைந்தது.
அனைத்து தொழில், கல்வித் தகுதிப் பிரிவினரிடத்திலும் பெரும்பாலும் எல்லா வயதுப் பிரிவினரிடத்திலும் மறுவேலைவாய்ப்பு விகிதம் சரிந்ததாக அமைச்சு கூறியது. 50களில் இருக்கும் உள்ளூர்வாசிகளிடத்தில் மட்டும் அவ்விகிதம் முந்திய 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருந்தது.
வேறு வேலை தேடிக்கொண்டோரில் 67 விழுக்காட்டினர் வேறு துறைகளுக்கு மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, 2020ன் கடைசி இரண்டு காலாண்டுகளாக காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 56,500ஆக உயர்ந்தது.

