வேலைக்காக மக்கள் இடபெயர விரும்பும் நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. 2014இல் தொடங்கப்பட்ட உலகளாவிய ஆய்வில் முதல் 10 இடங்களுக்குள் சிங்கப்பூர் வந்திருப்பது இதுவே முதல்முறை.
அதேநேரத்தில், குறைவான சிங்கப்பூரர்களே வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னுரிமை பெற்றுள்ள சூழலில், கொள்ளைநோய் பரவல் சிறந்த இடங்கள் குறித்த கருத்துகளை மாற்றிவிட்டது என 190 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 208,800 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் தெரியவந்தது.
2014இல் 24வது இடத்திலிருந்த சிங்கப்பூர் இப்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கனடா முதலிடத்திலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளிலும் உள்ளன.
"2020ல் இடம் மாற விரும்பும் திறனாளர்களின் விருப்பத்தேர்வுகளாக சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற பல ஆசிய-பசிபிக் நாடுகள் மாறிவிட்டன," என்று இணைய வேலைவாய்ப்பு சந்தையான 'சீக் ஆசியா' கட்டமைப்பும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமமும் தொகுத்த இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இது நாடுகளின் கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்கொண்ட விதம் காரணமாக இருக்கலாம். இந்நாடுகள் பெரும்பாலும் குறைந்த இறப்பு விகிதங்களைப் பதிவு செய்திருப்பதுடன் தொற்றையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து, ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் வேலைவாய்ப்பு சராசரியாக 28 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
சிறந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன், சிங்கப்பூரின் போட்டித்தன்மையும் திறனாளர்கள் விரும்பக் காரணமாகும்.
வலுவான அனைத்துலக வர்த்தகம், முதலீடு தவிர, சிங்கப்பூரின் மின்னிலக்க உள்கட்டமைப்பு, தேசிய நிலைத்தன்மை, புத்தாக்க கலாசாரம் ஆகியவை நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரம் தங்கள் சொந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருப்பதால், சீனா, கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகள், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், பொறியியலாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வமாக உள்ளனர் என அறிக்கை சுட்டியது.
கிட்டத்தட்ட 57 விழுக்காட்டினர் தங்கள் சொந்த நாட்டில் இல்லாத முதலாளிக்கு தொலைதூரத்திலிருந்து பணியாற்ற தயாராக இருப்பதாகக் கூறினர். ஆய்வில் பங்கேற்றசிங்கப்பூரர்களில் 44 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இந்த அளவு 2014ல் 79 விழுக்காடாக இருந்தது.