சிங்கப்பூர் உணவு முகவை 'சில்லி அப்பி கேட்டரிங்' என்ற உணவுச் சேவை வழங்கும் நிறுவனம் தயாரித்த உணவை உண்டதால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதுடன் அவர்களைப் பரிசோதனையும் செய்து வருகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு பதிலளித்த முகவை, பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், எப்போது அவர்கள் கோளாற்றை உணர்ந்தார்கள், அவர்கள் உண்ட உணவு விவரங்கள் போன்றவை குறித்து கேட்கப்படுவதாகக் கூறியது.
எண் 3015 பிடோக் நார்த்தில் உள்ள சில்லி அப்பி கேட்டரிங்கின் இடத்தையும் முகவை சோதனை செய்கிறது. உணவு மூலமாகப் பரவக்கூடிய கிருமிகளைப் பற்றிய உணவு மாதிரிகளையும் சோதனை செய்கிறது.
மார்ச் 10ஆம் தேதி புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையே இந்நிறுவனம் தயாரித்த உணவை உட்கொண்ட பின்னர் இரைப்பை பிரச்சினையால் குறைந்தது 82 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு முகவை ஞாயிறு அன்று கூறியது. அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் பணியாளர்கள் என்று கூறினார் கல்லூரி முதல்வர் லோ ஆய் நார். இவர்களில் எட்டுப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி 200க்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை தனது ஊழியர்களுக்காக 'சில்லி அப்பி' நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை வாங்கியது.
எண் 3015 பிடோக் நார்த்தில் உள்ள ஷெமி ஈஸ்ட் ஃபூட் கிட்சனில் நான்கு பகுதிகளில் இந்த உணவு நிறுவனம் இயங்குகிறது. இதில் மூன்றின் உணவுத் தரம் 'ஏ' முதல் 'பி' வரையில் இருப்பதாகவும் மற்ற பிரிவின் தரம் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றும் உணவு முகவை கூறியது.
'சில்லி அப்பி' நிறுவனத்தின் உணவு வர்த்தகம் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உணவு சேவையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருப்பதாகவும் அண்மைய இரைப்பை பிரச்சினை குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலத்தில் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது. விசாரணை நடைபெறுகிறது. சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்படுவதாகவும் அது கூறியது.
வளாகத்தில் பணிபுரியும் உணவைக் கையாளும் அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு உணவு பாதுகாப்பு படிப்பின் முதல் நிலையில் (லெவல் 1) சேர்ந்து தேர்ச்சி பெறவேண்டும். அத்துடன், உணவு மூலம் தொற்றும் கிருமிகள் அவர்களுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
உபகரணங்கள், பாத்திரங்கள் உட்பட வளாகத்தைச் சுத்தம் செய்யவும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் கூறப்பட்டுள்ளது.

