சிங்கப்பூரில் புதிதாக ஒன்பது பேருக்கு நேற்று கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இதனோடு, சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 60,137 ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிவருவதாகச் சுகாதார அமைச்சு கூறியது.
சமூக அளவில், ஐந்தாவது நாளாக எவருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை. ஊழியர் தங்குவிடுதிகளிலும் தொற்று இல்லை. நேற்றுமுன்தினம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 11 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் நேப்பாளத்திலிருந்து வந்த நான்கு வயதுச் சிறுமி. இவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று அறிகுறி எதுவும் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.
அனைவரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் சிறப்பு அனுமதி அட்டை வைத்திருக்கும் மற்றொருவர் பிலிப்பீன்சிலிருந்து வந்த கப்பல் ஊழியர். 43 வயதான அந்த பெண்மணிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அதுவரை அவர் கப்பலிலேயே இருந்தார். இதுவரை 59,969 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 21 பேர் மருத்துவமனையில் உள்ளனர். 30 பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

