திருமண வாழ்க்கை, பெற்றோர் பருவம் ஆகியவற்றைப் பற்றிய மக்களின் எண்ணங்களில் கொவிட்-19 எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மேலும் நன்கு புரிந்துகொள்ள புதிய கலந்துரையாடல் தொடர் ஒன்று அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
கொள்ளைநோய்ச் சூழலால் வேலைச் சந்தை உட்பட நிச்சயமற்ற பொருளியல் நிலை ஏற்பட்டுள்ளதற்கு இடையே குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது பற்றி உலகெங்கிலும் உள்ள இளையர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவு மேற்கொண்ட ஆய்வில், சிங்கப்பூரர்களுக்கும் அதே கவலை இருப்பது தெரியவந்தது.
திருமணமான 21 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர், குழந்தை பெற்றுக்கொள்வதை இரண்டு ஆண்டுகள் வரை தள்ளிப்போடத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரிவித்தனர். 'குடும்பங்களுக்கான ஓர் சிங்கப்பூரை உருவாக்குதல்' என்ற தலைப்பு கொண்ட இக்கலந்துரையாடல் தொடர் குறித்து பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று அறிவித்தார்.
"சிங்கப்பூரர்கள் பலர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் கொள்ளைநோயால் அவர்களின் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். இந்த கொள்ளைநோய்ச் சூழலிலும் உங்கள் வாழ்க்கைத் திட்டங்களைத் தொடர்ந்து நீங்கள் செயல்படுத்த நாங்கள் மேலும் எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம்," என்றார் அவர்.
திருவாட்டி இந்திராணியுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் இக்கலந்துரையாடல் திட்டத்தை வழிநடத்துவார்.
வெவ்வேறு வாழ்க்கைக் கட்டங்களில் உள்ள, சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 400 பேரை இக்கலந்துரையாடல் தொடரில் ஈடுபடுத்துவதே இலக்கு. இதனால் பலதரப்பட்ட கருத்துகள் திரட்டப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள், அவர்களின் துணைவர், சிங்கப்பூரர்களின் பெற்றோர் ஆகியோர் இக்கலந்துரையாடல் தொடருக்குப் பதிந்துகொள்ளலாம்.
அடுத்த மாதம் தொடங்கும் கலந்துரையாடல் தொடர், செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
துணை தேடலில் உள்ளோர், திருமணமாகவுள்ளோர், குழந்தைகள் இல்லாத தம்பதியர், ஆறு வயதுவரை பிள்ளைகள் உள்ள பெற்றோர், தொடக்கப்பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ள பெற்றோர் ஆகியோருக்கு முதலில் ஆறு கலந்துரையாடல் அமர்வுகள் இணையம் வாயிலாக நடத்தப்படவுள்ளன.
குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது, பிள்ளைகள் பெற்றுக்கொள்வது ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடலில் பங்கேற்போர் தங்களின் கவலைகளையும் சவால்களையும் பகிர்ந்துகொள்ளலாம். சவால்களை எதிர்கொள்வதற்கான சில யோசனைகளையும் பரிமாறிக்கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
'கருவுறுதல்' தொடர்பான விவகாரங்களைப் பற்றி கருத்து கூறுவதெற்கென இணைய அமர்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும்.
2019ஆம் ஆண்டில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்திருந்த 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான கலந்துரையாடல்கள்' கீழ் இப்புதிய கலந்துரையாடல் தொடர் அங்கம் வகிக்கும்.
'குடும்பங்களுக்கான ஓர் சிங்கப்பூரை உருவாக்குதல்' கலந்துரையாடல் தொடரில் பங்கேற்க விரும்புவோர், go.gov.sg/families-convo என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். ஒவ்வொரு கலந்துரையாடலும் தொடங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

