தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர் ஒருவர் சக மாணவரைத் தாக்கித் துன்புறுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக வலம் வந்ததை அடுத்து, தாக்கிய மாணவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஐடிஇ தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்துவிட்டதாக ஐடிஇ அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுக் காலை பதிவிட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது தாக்குதல் நடத்தியவரைப் பள்ளியிலிருந்து வெளியேற்றுவது வழக்கம் என்றும் கூறியது.
"சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர்கள் சமூகச் சேவை செய்வர் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வந்த அந்தக் காணொளி, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகக் கழிவறை ஒன்றில் எடுக்கப்பட்டது. மாணவர் ஒருவரிடம் 'உனக்கு என்ன பிரச்சினை?' என்று கேட்டவாறு இன்னொரு மாணவர் அவரைப் பிடித்து வைத்துக் கேட்பதாக உள்ளது. குறைந்தது மூவர் அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஓர் இளையர் கழிவறை வாசலை மறைத்தவாறு நின்றார்.
இதையடுத்து, குறிவைக்கப்பட்ட மாணவரின் முகக்கவசத்தைக் கிழித்து, அவரை அறைந்து, தகாத சொற்களைக் கூறுவதாக உள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் மன்னிப்பு கேட்பதாகவும் பின்னணியில் சிரிப்புச் சத்தம் கேட்பதாகவும் காணொளியில் அமைந்துள்ளது.
தாக்கப்பட்ட மாணவரின் தலையின் பின்னால் ஓர் அடி, காலின் பின் பகுதியில் ஓர் உதை எனத் தாக்குதல் தொடர்ந்தது.
காணொளி எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை. காணொளி தொடர்பில் அனைத்து மாணவர்களும் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டதுடன் விசாரணை நடந்து முடியும் வரை ஒரு மாணவர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது.
கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் இது தொடர்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், "ஒருவரை இவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது ஒழுக்கக் கேடானது, கண்டிக்கத்தக்கது. மேலும், தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவரை இப்படித் தாக்குவது தவறு," என்று குறிப்பிட்டிருந்தார்.
பள்ளி இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்களைக் கடுமையாகக் கருதும் என்றார் ஐடிஇ முதல்வர் சுரேஷ் நடராஜன்.

