ஓசிபிசி தானியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) வாடிக்கையாளர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணை அழுத்தி இயந்திரத்தில் உள்ள கேமராவில் தங்களது முக அடையாளத்தைக் காண்பித்து இன்று முதல் வங்கிக் கணக்கில் எஞ்சியுள்ள தொகையைச் சரிபார்க்கலாம்.
ஏடிஎம் இயந்திரங்களில் இந்த முக அடையாள வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ஏடிஎம் அட்டையை வெளியே கொண்டு செல்வதற்கான தேவை குறைவதாக ஓசிபிசி நேற்று கூறியது.
இப்போதைக்கு அதன் ஏடிஎம் இயந்திரங்களில் வங்கிக் கணக்கு விவரங்களை மட்டும் சரிபார்க்க முடியும்.
ஓசிபிசி தெம்பனிஸ் சென்டர் 2ல் உள்ள ஏடிஎம் ஒன்றில் இன்று முதல் இச்சேவை வழங்கப்படுகிறது. தாமான் ஜூரோங் ஷாப்பிங் சென்டரில் வரும் திங்கட்கிழமையில் இருந்து இச்சேவை வழங்கப்படும்.
அடுத்த வார இறுதிக்குள் கூடுதலாக ஓசிபிசியின் ஆறு ஏடிஎம் இயந்திரங்களில் இச்சேவை தொடங்கும். பிக்கரிங் ஸ்திரீட், ஓசிபிசி தெம்பனிஸ் சென்டர் ஒன், எச்டிபி ஹப், எண் 103 ஈசூன் ரிங் ரோடு, கேலாங் ரோடு 7-இலெவன் கடை, அந்த வங்கியின் கற்றல், மேம்பாட்டு மையமான ஓசிபிசி கேம்பஸ் ஆகிய இடங்களில் அந்த ஏடிஎம்கள் உள்ள.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இருந்து சிங்கப்பூரில் உள்ள 550 ஓசிபிசி ஏடிஎம் இயந்திரங்களிலும் முக அடையாளச் சோதனையைக் கொண்டு ரொக்கம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படவுள்ளது.
ரொக்கம் நிரப்புதல், மற்ற வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றிவிடுதல், ரொக்க அட்டையை நிரப்புதல், கடன்பற்று அட்டை தொடர்பாக கட்டணம் செலுத்துதல் போன்ற இதர பரிவர்த்தனைகளுக்கும் முக அடையாளச் சோதனை முறை அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும்.
வங்கிக் கணக்கில் எஞ்சியுள்ள தொகையைச் சரிபார்ப்பதும் ரொக்கம் எடுப்பதும் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளில் அடங்கும்.
'ஓசிபிசி பே எனிஒன்' செயலியைக் கொண்டு வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் 'கியூஆர்' குறியீட்டை வருடி பணம் எடுக்க உதவும் சேவை 2019ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து நடப்பில் உள்ளது.