சிங்கப்பூரில் சென்ற மாதம் சீனப் புத்தாண்டின்போது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த விழாக்காலத்தில் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இருந்தாலும், கட்டுப்பாடுகளைத் தளர்த்த காலம் இன்னமும் கனியவில்லை என்றும் பொதுமக்கள் தொடந்து விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
சீனப் புத்தாண்டு விடுமுறை நாட்களான பிப்ரவரி 12, 13ஆம் தேதிகளுக்கு முன்னதாக கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு பல கட்டுப்பாடுகளை விதித்தது.
அந்தச் சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், சூழ்நிலை மேம்பட்டு இருந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்று பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கூறி இருந்தார்.
விழாக்காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து ஒரு சில வாரங்களுக்கு சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
கடந்த மாதத்தில் சமூகத்தொற்று குறைவாகவே இருந்து வந்தது. மார்ச் 3க்குப் பிறகு வாரம் ஒன்றுக்கு ஏறத்தாழ புதிதாக இரண்டு பேர் சமூகத்தொற்றுக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு விதத்தில் நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன.
பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. சென்ற மாதம் புதிதாக கிருமி தொற்றியோரில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
அதேவேளையில், கொவிட்-19 கிருமி இன்னமும் ஒழியவில்லை. இருந்தாலும் சிங்கப்பூர் நிலவரம் சமாளிக்கத்தக்க அளவில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இம்மாதம் 15 நிலவரப்படி சிங்கப்பூரில் 549,000க்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் 243,000 பேர் இரண்டாவது ஊசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள்தொகையில் ஏறத்தாழ 4 விழுக்காட்டினர் தடுப்பூசியை இருமுறை போட்டுக்கொண்டுள்ளனர்.

