தற்போதைய கொவிட்-19 சூழலில் மற்ற நாடுகளுடன் தைவான் இருதரப்பு பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ள விரும்பும் பட்டியலில் அடுத்ததாக சிங்கப்பூர் உள்ளது என தைவானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பலாவ் தீவுடன் இருதரப்பு பயண ஏற்பாட்டை தைவான் நேற்று முன்தினம் செய்துகொண்டது. அதையடுத்து சிங்கப்பூருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தைவான் நேற்று தெரிவித்தது.
தைவானில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் வந்தவுடன் இரு வார கட்டாய தனிமை உத்தரவை நிறைவேற்றுவதிலிருந்து பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும்.
சிங்கப்பூர் தரப்பில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தைவான் தரப்பிலும் தளர்வுகளை சிங்கப்பூர் எதிர்பார்த்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையில் பயண ஏற்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தைவானிய சுகாதார அமைச்சர் சென் சி சுங் நேற்று கூறினார்.
தைவானுடன் இருதரப்பு பயண ஏற்பாடுகளைத் தொடங்குவதற்கான சாத்தியம் குறித்து ஜப்பான், தென்கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் மும்முரம் காட்டி வருவதாக தைவானிய போக்குவரத்து அமைச்சர் லின் சியா லுங் சொன்னார்.
பயண ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் இன்னும் பேசப்பட்டு வருவதால் இதுகுறித்த மேல்விரங்களை வெளியிட திரு லின் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், பலாவ் தீவு உடனான இருதரப்பு பயண ஏற்பாடு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு விமானங்களில் தலா 110 பயணிகள் பலாவ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
"பலாவில் தொடர்ந்து கொவிட்-19 சம்பவம் எதுவும் பதிவாகாததால் அத்தீவுடன் பயண ஏற்பாட்டைத் தொடங்க தைவான் முடிவு செய்துள்ளது," என்று திரு சென் விவரித்தார்.