அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டாபோட்டி கூடி உள்ளது. உலகமய ஏற்பாட்டிற்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருகின்றன. கொவிட்-19 காரணமாக எல்லைகள் மூடிக்கிடப்பதால் நாடுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் உறவுகள் மேலும் வலுவடைய பல வாய்ப்புகள் இருக்கின்றன என்று 14வது ஜப்பான்-சிங்கப்பூர் கருத்தரங்கில் உரையாற்றிய பிரமுகர்கள் குறிப்பிட்டனர்.
மின்னிலக்கமயம், பசுமைப் பொருளியல், தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றிலும் தாராள வர்த்தகம், கடல்வழி சுதந்திரம், சட்ட ஆட்சி முறை போன்ற பொதுவான நியதிகளிலும் அதிக ஒத்துழைப்புக்கு இடம் இருப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், ஜப்பானின் வெளியுறவு துணை அமைச்சர் ஈச்சிரோ வாஷியோ, பொதுத் தூதர் டோமி கோ, ஜப்பானின் வாசெடா பல்கலைக்கழக பேராசிரியர் யுகிக்கோ ஃபுகாகவா ஆகியோர் அந்த மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிங்கப்பூரும் ஜப்பானும் கொவிட்-19லிருந்து மீண்டு வர பாடுபடுகின்றன. இந்த நிலையில், ஜப்பானுடன் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாக ஒத்துழைக்கும் என்று அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
மக்களின் மீள்திறன், குடிமை உணர்வு ஆகியவை தொடர்பில் ஜப்பானிடம் இருந்து சிங்கப்பூர் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
கருத்தரங்கில் உரையாற்றிய ஜப்பானிய அமைச்சர், சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் வட்டாரத்தை உருவாக்குவது தொடர்பில் ஜப்பான் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கருத்தரங்குக்கு சிங்கப்பூர் அனைத்துலக விவகாரப் பயிலகமும் ஜப்பான் அனைத்துலக விவகாரப் பயிலகமும் ஏற்பாடு செய்திருந்தன.

