தவறான இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டுபிடிக்க அதிநவீன பரிசோதனை முறையை நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
இதன்படி கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் சாலைகளில் வலம் வருவதை எதிர்பார்க்கலாம்.
நடமாடும் வாகனங்களின் காணொளிகளைப் பகுப்பாய்வு செய்து பல்வேறு வாகன நிறுத்துமிடக் குற்றச்செயல்களை அடையாளம் காண்பதே புதிய முயற்சியின் நோக்கம் என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரட்டை மஞ்சள் கோட்டுக்கு அருகே வாகனங்களை நிறுத்துவது, ஒரு தடம் கொண்ட சாலையில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட குற்றச்செயல்கள் இதன் மூலம் கண்டுபிடிக்கப்படும்.
எல்லா பருவநிலையிலும் சூழ்நிலையிலும் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய தொழில்நுட்பம், கார்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் கண்டறியும்.
இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்தால் வாகன நிறுத்து மிடக் குற்றச்செயல்களைக் கண்டு பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மனிதவளம் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்ட ஓட்டுநர் மட்டுமே தேவைப்படுவார்.
புதிய தொழில்நுட்பம், மூன்று கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.
வீடியோ கேமரா, வாகனத்தின் எண் பலகையை அடையாளம் காணும் மென்பொருள், காணொளிகளைப் பகுப்பாய்வு செய்து வாகனம் நிறுத்துமிடக் குற்றச்செயல்களை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆகியவை அவை.
லிட்டில் இந்தியா, தஞ்சோங் பகார் உள்ளிட்ட சாலைகளில் ஆறு மாதச் சோதனை 2021ஆம் ஆண்டின் 2வது பாதியில் தொடங்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அது மேலும் கூறியது.

