நியூசிலாந்தில் 2017ல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூரர் உட்பட இளம் தம்பதியர் மாண்டனர்.
இதற்கு காரை ஓட்டியவருக்கு ஏற்பட்ட சோர்வே காரணம் என்று மரண விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்துக்கு இரவு முழுவதும் விமானம் மூலம் பயணம் செய்த தம்பதியர் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றனர். மூன்று மணி நேரத்திற்குள் நெடுஞ்சாலையில் அவர்களுடைய வேன் விபத்தில் சிக்கியது.
இதில் சின் சே ஹாவ், 38, ஓங் சீ யீ, 29 ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
சின்னுக்கு உறக்கக் கலக்கத்தில் சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.
அதனால் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தன்னையறியாமல் சற்று அயர்ந்திருக்கலாம் என்று நியூசிலாந்து போலிசார் கருதுவதாக கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் நியூசிலாந்து மரண விசாரணை அதிகாரி அன்னா டட்டன் தெரிவித்திருந்தார்.
"நீண்டநேர விமானப் பயணத்துக்குப் பிறகு நன்றாக தூங்கி ஓய்வு எடுக்கும்படி ஓங், சின் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப் பட்டது.
ஆனால் அவர்கள் தொடர்ந்து வேனை ஓட்டிச் சென்றுள்ளனர்.
சோர்வுடன் வேனை ஓட்டியதால்தான் இருவரும் மரணம் அடைந்தனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது," என்று அக்டோபர் மாதக் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு அவர் கூறினார்.
2017 மே 4ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச்சிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பேங்க்சைட் அருகே நெடுஞ்சாலையில் அந்த விபத்து நிகழ்ந்தது.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட திரு சின்னும் ஓங்கும் காலை 8.30 மணிக்கு கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தை அடைந்தனர்.
ஏறக்குறைய பத்து மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு காலை 10.30 மணியளவில் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பிற்பகல் ஒரு மணி அளவில் திரு சின் ஓட்டிச் சென்ற வேன் சாலையிலிருந்து விலகி ஓடியது. அப்போது வேனை அவர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்.
ஆனால் அதற்குள்ளாக எதிரே வந்த டிரக் மீது அவரது வேன் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் மாண்டனர்.
டிரக் ஓட்டுநருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் களைப்பைப் போக்குவதற்கு உறக்கம் ஒன்றே சிறந்த வழி என்று நியூசிலாந்து போலிசார் கூறியுள்ளனர்.
வாகனம் ஓட்டும்போது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது 100 கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஓய்வு எடுப்பது அவசியம் என்று அதிகாரி டட்டன் கூறியுள்ளார்.

