சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு வளங்களை நிர்வகிக்க 2019 டிசம்பரில் தகவல்தொழில்நுட்ப முறை என்ற ஓர் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சுகாதார தகவல் முறை (IHiS) என்று குறிப்பிடப்படும் அந்த முகவையைச் சேர்ந்த ஒரு குழு, தனது தகவல்தொழில்நுட்ப முறையில் கிருமித் தொற்றை நிர்வகிக்க மேலும் பலவற்றை அடுத்த 12 மாதங்களில் உருவாக்கவேண்டும் என்று திட்டங்களை வகுத்திருந்தது.
ஆனால் சென்ற ஆண்டு ஜனவரியில் கொவிட்-19 தலைகாட்டியதை அடுத்து அந்தப் பணிகளை நான்கே மாதங்களில் குழு முடித்தது.
மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவைகளையும் இதர சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்கான தேவைகளையும் முன்னதாகவே கணித்து செயல்பட அந்தக் குழு உருவாக்கிய புதிய அம்சங்கள் உதவின.
‘நெருக்கடிகால தொழில்நுட்ப கதாநாயகர்கள்’ என்ற கருப்பொருளுடன் சிங்கப்பூர் கணினிச் சங்கம் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதற்காக அந்த முகவை நேற்று விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் தொழில்நுட்பங்களின் மூலமாக சமூகத்தில் ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்திய மக்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.