வட்டாரத்திலும் அனைத்துலக அளவிலும் நிலவும் பாதுகாப்புச் சவால்கள் பற்றி ஆசியான் நாடுகளின் ராணுவத் தளபதிகள் கலந்துரையாடினர். தங்களது படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் அப்போது அவர்கள் கலந்து ஆலோசித்தனர். புருணை தலைமை ஏற்ற 'ஆசியான தற்காப்புப் படைத் தலைவர்களின் 18வது சந்திப்பு' என்னும் இணைய நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் எல்லா 10 ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சிங்கப்பூர் சார்பாக தற்காப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங் கலந்துகொண்டார்.
இந்த வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்புச் சவால்கள் மீது கவனம் செலுத்துவதில் உறுப்பு நாடுகளின் ராணுவப் படை கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கடப்பாடு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை மறுஉறுதிப்படுத்தும் வகையிலான கூட்டறிக்கை ஒன்றை ராணுவத் தலைவர்கள் வெளியிட்டதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆசியான் ராணுவப் படைகளின் ஈராண்டு செயல்பாட்டு பணித்திட்டத்திற்கான ஒப்புதலையும் அப்போது அவர்கள் வழங்கினர். வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஆசியான் ராணுவத்தினருக்கு ஆதரவு வழங்கக்கூடிய ஆசியான் ராணுவப் பயிற்சிக்கான செயல்திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக புருணை தற்காப்பு அமைச்சு கூறியது.
சிங்கப்பூரின் மெல்வின் ஓங் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மியன்மார் நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஆயுதமற்றுப் போராடும் மக்கள் மீது ஆபத்தை ஏற்
படுத்தும் வகையிலான ஆயுதங்களைப் பயன்
படுத்துவதை மியன்மார் ராணுவம் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதர ராணுவத் தலைவர்களும் இதேபோன்ற கவலையை வெளிப்படுத்தினர். மியன்மாரின் தலைமைத் தளபதி மின் ஆங் லைங்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். கடந்த மாதம் 1ஆம் தேதி ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரின் அரசியல் நிலைத்தன்மை சீர்குலைந்து வருகிறது.

